இனிமேல் கசையடி தண்டனை கிடையாது.. அதிரடி முடிவு எடுத்த சவுதி அரேபியா.. பெரும் மாற்றம்!
சவுதி அரேபியாவில் கசையடி தண்டனைகளை நிறுத்த போவதாக அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
ரியாத்: சவுதி அரேபியாவில் கசையடி தண்டனைகளை நிறுத்த போவதாக அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. தொடர் விமர்சனங்களை தொடர்ந்து அந்நாட்டு அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
உலகில் கொடுமையான தண்டனை சட்டங்கள் உள்ள நாடுகளில் மத்திய கிழக்கு நாடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக சவுதி அரேபியாவில் கடுமையான தண்டனை சட்டங்கள் உள்ளது. எல்லா வருடமும் அதிகமான தூக்கு தண்டனை விதிக்கப்படும் நாடுகளில் சவுதி அரேபியாவும் முக்கியமான இடம் வகிக்கிறது.
அதேபோல் சவுதி அரேபியாவில் பொதுவில் மக்கள் முன்னிலையில் தாக்கப்படும் தண்டனை முறைகளும் அமலில் உள்ளது. பொதுவாக கசையடி தண்டனை என்று இது அழைக்கப்படும். மிகவும் வலிமையான கயிறுகள் மூலம் குற்றம் செய்தவர்களை பொது இடத்தில் வைத்து முதுகிலும் உடலின் பிற பகுதிகளிலும் தாக்குவார்கள்.
எத்தனை கசையடி
தண்டனையை பொறுத்து ஆயிரம் கசையடி, 2000 கசையடி என்று எண்ணிக்கை மாறும். இன்னும் சில தண்டனைகளுக்கு இரும்பு கம்பிகள் கொண்டும், கூரான சாதனங்கள் கொண்டு தாக்குவது தண்டனை வகைகளில் ஒன்றாகும். இப்படி பல வகையான கசையடி தாக்குதல் முறைகள் மூலம் அங்கு தண்டனையாக வழங்கப்பட்டு வருகிறது.
சட்டத்தை கைவிடுகிறது
இந்த நிலையில் அந்நாட்டில் இந்த கசையடி தண்டனைகளை மொத்தமாக நிறுத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு பதிலாக சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. சவுதியில் கொடுக்கப்படும் கசையடி தண்டனைகளுக்கு உலகம் முழுக்க மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இப்போது அங்கு இந்த சட்டம் கைவிடப்பட்டுள்ளது.
சீர் திருத்த சட்டம்
சவுதி அரேபியாவின் அரசர் சல்மான் மற்றும் முடி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் நிறைய சீர்த்திருத்த சட்டங்களை கொண்டு வருகிறார்கள். அங்கு முதல் சினிமா தியேட்டர், பெண்களுக்கு லைசன்ஸ் வழங்கியது என்று நிறைய சீர் திருத்த சட்டங்களை அங்கு முகமது பின் சல்மான் கொண்டு வந்தார். அதன் ஒரு கட்டமாக தற்போது கசையடி தண்டை நீக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.
கடும் எதிர்ப்பு
முன்னதாக 2015ல் சமூக செயற்பாட்டாளர் ரைஃப் படாவி என்ற நபருக்கு 1000 கசையடிகள் 7 நாட்களுக்கு தண்டனையாக விதிக்கப்பட்டது. ஆனால் இவர் கசையடி காரணமாக உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டது. இதனால் அவருக்கு தண்டனை பாதியில் நிறுத்தப்பட்டது. அப்போதில் இருந்தே சவுதியின் கசையடி தண்டனை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவியது. தற்போது மொத்தமாக இந்த தண்டனை சட்டம் நீக்கப்பட்டுள்ளது.