75 பேருக்கு ஒரு கழிவறை, சம்பளமும் இல்லை.. கொரோனா பிடியில் அமீரக தொழிலாளர்கள்.. குடும்பங்கள் பாதிப்பு
ரியாத்: வளைகுடா நாடுகளில் பணியாற்றி கொண்டிருக்கக்கூடிய வெளிநாட்டு தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் மிகுந்த பொருளாதார சரிவை சந்தித்து வருகிறார்கள். இது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்து வரும், அவர்களது குடும்பத்தினரையும் பாதித்துள்ளது.
இது பற்றி அமெரிக்காவின் முன்னணி நாளிதழ், தி நியூயார்க் டைம்ஸ் ஒரு கட்டுரையை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியுள்ள முக்கிய அம்சங்களை பாருங்கள்.
வளைகுடா நாடுகளில் பணியாற்றி கொண்டிருக்கக்கூடிய வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்தவர்கள்.
தற்போது கத்தார் லாக் டவுன் நடைமுறையை கையில் எடுத்துள்ளது. சவுதி அரேபியா அதன் வெளிநாட்டு ஊழியர்களை வீட்டிலேயே இருக்கும்படி கேட்டுக் கொண்டு இருக்கிறது. இதன் அர்த்தம் அவர்களுக்கான ஊதியம் வழங்கப்பட மாட்டாது. அவர்கள் பணிக்கும் செல்ல முடியாது.
கொரோனா உதவிக்கு கைமாறு?.. ரூ.1000 கோடி மதிப்பு.. இந்தியாவிற்கு மாஸ் ஏவுகணைகளை அனுப்பும் அமெரிக்கா!
வெளிநாட்டுக்காரர்கள்
சவுதி அரேபியா சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த ஏப்ரல் 5ம் தேதி வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, அந்த நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர், வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள்தான் என்று தெரிவித்திருந்தது. வெளிநாட்டை சேர்ந்த தொழிலாளர்களுக்கு வைரஸ் பரவுவது மிகவும் எளிதான ஒரு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. இதற்கு காரணம், அவர்கள் உரிமையாளர்களால் கூட்டமாக ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டு இருப்பதுதான்.
சில துறைகள்
ஒருபக்கம் வேலையின்மை, மற்றொரு பக்கம், தங்கியிருக்கக் கூடிய இடத்தில் எளிதாக பரவக்கூடிய நோயின் தன்மை போன்ற இந்த இருபெரும் காரணங்கள் அவர்களின் பொருளாதார நிலையை மட்டுமல்லாது அவர்களின் வருமானத்தை நம்பி சொந்த நாடுகளில் வசிக்கக்கூடிய அவர்களின் குடும்பத்தினருக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. என்னதான் வளைகுடா நாடுகள் பலவும் லாக்டவுன் நடைமுறையை கையிலெடுத்து இருந்தாலும் கூட, எண்ணெய், எரிவாயு, கட்டுமானம் போன்ற முக்கியமான துறைகளில் இன்னமும் கூட ஓரளவுக்கு பணிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
பரவும் வாய்ப்பு
இங்கு வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான் பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்கள் ஒரே இடத்தில் வசிக்க கூடிய வாய்ப்பு இருப்பதால், ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், காட்டுத்தீ போல பிறருக்கும் பரவக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வளைகுடா நாடுகளின் மனித உரிமை ஆய்வாளர் ஹிபா ஜயாதின் தெரிவிக்கிறார்.
450 பேருக்கு 6 கழிவறை
கச்சா எண்ணெய் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றக்கூடிய கென்யா நாட்டை சேர்ந்த ஒரு தொழிலாளி கூறுகையில், கூட்டமாக வசிப்பதுதான் இந்த நாட்டில் ஒரு பெரிய பிரச்சனை. அடிக்கடி கை கழுவுவது என்பது எல்லாம் நடைமுறையில் இங்கு சாத்தியப்படாத ஒன்று. எனக்கு ஒதுக்கப்பட்ட அறை மூன்று தொழிலாளர்களால் பங்கிடப்பட்டுள்ளது. 450 பேருக்கு 6 கழிவறைகள் மட்டுமே (75 பேருக்கு ஒரு கழிவறை) எங்கள் நிறுவனத்தின் குடியிருப்பு பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. இப்படியான ஒரு சூழ்நிலையில், சமூக விலகல் என்பது எப்படி சாத்தியப்படும்? கடவுள் ஒருவர்தான் எங்களை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வளைகுடா நிலைமை
சவுதி அரேபியாவில் இதுவரை, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருக்கிறார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தில், 4500 நோயாளிகள் உள்ளனர். கத்தார் நாட்டில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள், உள்ளனர். ஓமன் நாட்டில் 727 பேர், பக்ரைன் நாட்டில் 1367 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.