பத்திரிகையாளரை துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய சவுதி தூதரக அதிகாரிகள்.. வெளியான திடுக் தகவல்
Recommended Video
ரியாத்: சவுதி அரேபியாவைச் சேர்ந்தவரும், அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட்டில் பணியாற்றியவருமான ஜமால் கஷோகி உடல் தூதரக அதிகாரி தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சவுதி அரேபியாவில் முன்னணி புலனாய்வு பத்திரிகையாளராக இருந்தவர் ஜமால் கஷோகி. ஆனால் அங்கு இளவரசர் முகமது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பிறகு அவரை தொடர்ந்து விமர்சனம் செய்து கட்டுரைகள் எழுதி வந்தார்.
இதையடுத்து ஜமால் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அவர் அங்கிருந்து அமெரிக்காவுக்கு சென்று குடிபுகுந்தார்.
[வரதட்சணை தரவில்லை என்பதற்காக மருமகள்களை இப்படி செய்யலாமா மாமனார்?]
சவுதி தூதரகம்
வாஷிங்டன் போஸ்ட் என்ற பிரபல பத்திரிக்கையில் பணிக்கு சேர்ந்தார். ஆனால் அங்கிருந்த படியும் சவுதி இளவரசர் தொடர்பாக விமர்சனக் கட்டுரைகளை ஆதாரங்களுடன் வெளியிட்டு வந்தார். இதனால் இளவரசர் தரப்பு இவர் மீது கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் துருக்கியைச் சேர்ந்த ஜெயிஸ் செங்குஸ் என்ற பெண்ணுடன் ஜமாலுக்கு காதல் ஏற்பட்டது. இதையடுத்து தனது விவாகரத்து தொடர்பான ஆவணங்களை வாங்குவதற்காக துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்திற்கு செப்டம்பர் 28-ஆம் தேதி ஜமால் கஷோகி சென்றார். ஆனால் அவரை மீண்டும் அக்டோபர் 2ம் தேதி திரும்பி வருமாறு சவுதி தூதரக அதிகாரிகள் கூறி திருப்பி அனுப்பினர்.
திரும்பவில்லை
அக்டோபர் 2ம் தேதி சவுதிஅரேபியா தூதரகத்திற்கு சென்ற ஜமால் கஷோகி, திரும்பி வரவே இல்லை. இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி அரசும் ஊடகங்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. இவரை கொலை செய்வதற்காகவே ரியாத் நகரில் இருந்து தனித்தனி ஜெட் விமானங்களில் அன்றைய தினம் துருக்கிக்கு 15 பேர் கொண்ட சிறப்பு குழு சென்றதாகவும், துருக்கி ஊடகங்கள் ஆதாரங்களுடன் செய்திகளை வெளியிட்டன.
தூதரகத்திற்குள் கொலை
இதையடுத்து அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளின் அழுத்தம் தீவிரமானது. தனது தூதரகத்திற்குள் வைத்து ஜமால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை சவுதி அரேபியா இரு தினங்களுக்கு முன்பாக ஒப்புக்கொண்டது. அதிகாரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது தான் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சவுதி கூறியது.
துண்டு துண்டாக
ஆனால் துருக்கி ஊடகங்கள் ஜமால் கஷோகி துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார் என்று செய்திகள் வெளியிட்டன. சவூதி அரேபிய தூதரக அதிகாரி ஒருவர் வீட்டின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் தான் ஜமால் கஷோகியின் வெட்டப்பட்ட உடல் கிடப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உலக நாடுகளின் கோபம் சவுதி அரேபியா மீது திரும்பியுள்ளது.