ஹஜ் புனிதப் பயணம்... வெளிநாட்டினருக்கு இந்தாண்டு அனுமதி இல்லை... சவுதி அரேபியா திட்டவட்டம்
ரியாத்: இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு வெளிநாட்டினருக்கு அனுமதி கிடையாது என சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
அதே சமயம் ஹஜ் பயணம் ரத்து செய்யப்படவில்லை என்றும், உள்நாட்டில் வசிப்பவர்கள் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்கப்படுவர் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதனால் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் இந்தாண்டு ஹஜ் புனிதப்பயணம் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் புதிதாக 52 பேருக்கு கொரோனா - 24 பேர் டிஸ்சார்ஜ்
ஐம்பெரும் கடமை
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ஹஜ். வசதி படைத்த இஸ்லாமியர்கள் வாழ்வில் ஒருமுறையாவது ஹஜ் பயணம் செல்ல வேண்டும் என்பது கடமையாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் மாதத்தில், அதாவது ரமலான் பண்டிகை முடிந்த சுமார் 2 மாதங்களில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் நிகழ்வு உலகம் முழுவதும் நடைபெறும். கோடிக்கணக்கான நபர்கள் சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் குவிவார்கள்.
உள்நாட்டினர்
இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு ஹஜ் முழுமையாக ரத்து செய்யப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், வெளிநாட்டினருக்கு மட்டும் அனுமதி மறுத்துள்ளது சவுதி அரேபியா அரசு. உள்நாட்டில் வசிக்கக்கூடிய வெளிநாட்டு மக்கள் மற்றும் உள்நாட்டினர் குறைந்த எண்ணிக்கையில் குறிப்பிட்ட இடைவெளியில் ஹஜ் செய்ய அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் உடல்நலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்ட முடிவு என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தடுப்பு நடவடிக்கைகள்
இதனிடையே சவுதி அரேபியாவில் படிப்படியாக பள்ளிவாசல்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில், தொழுகைக்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அரசு மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும், இஸ்லாம் கூறும் மனிதநேயத்தையும், அன்பையும் கடைபிடிக்க வேண்டும் எனவும் சவுதி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
ஒன்றரை லட்சம்
சவுதி அரேபியாவில் இது வரை ஒன்றரை லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில் 1,307 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கடந்த மார்ச் மாதம் முதலே சர்வதேச விமானங்களை ரத்து செய்துள்ளதோடு உம்ரா பயணத்தையும் அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. உம்ரா, ஹஜ், ஆகிய புனிதப் பயணங்கள் மேற்கொள்ளும் யாத்ரீகர்கள் மூலம் ஆண்டுதோறும் சுமார் ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு சவுதி அரேபியா அரசுக்கு வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.