சவூதி அரேபியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிப்பு.. மன்னரின் தம்பி மற்றும் அவரது மகன் கைது
ரியாத்: சவூதி அரேபியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முறியடிக்கப்பட்டுள்ளது. மன்னர் சல்மானின் தம்பி அகமது பின் அப்துல் அசீஸ், அகமதின் மகன் முகமது பின் நயீப் ஆகியோர் அரசு அதிகாரிகளின் உதவியுடன் ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியாவில் மன்னராட்சி நடந்து வருகிறது. மன்னர் சல்மான் (84 வயது) ஆட்சி செய்து வருகிறார். ஆனால் அங்கு உண்மையான ஆட்சியாளர் என்றால் . அவருக்கு பின் பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்ட அவரது மகன் முகமது பின் சல்மான் தான். அவர் தான் ஆட்சியை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மன்னர் சல்மானின் தம்பி அகமது பின் அப்துல்அசீஸ், அகமதின் மகன் முகமது பின் நயீப் ஆகியோர் ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக தேசதுரோக குற்றச்சாட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. ஆட்சியை கவிழ்க்க இவர்களுக்கு உள்துறை அமைச்சக அதிகாரிகள், மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் பிற துறை அதிகாரிகள் சிலர் உதவியதாக கூறப்படுகிறது.
சல்மானக்கு பாதுகாப்பு
கைது செய்யப்பட்ட இளவரசர் இருவரையும் முகமூடி அணிந்த வீரர்கள் விசாரணைக்காக அரசவைக்கு அழைத்துச் சென்றதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.‘
முகமது பின் நயீப் நீக்கம்
அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களைக் கொண்ட அலெஜியன்ஸ் கவுன்சிலின் மூன்று நபர்களில் ஒருவரான முகமது பின் நயீப், ஜூன் 2017 இல் முகமது பின் சல்மான் பட்து இளவரசராக இருப்பதை எதிர்த்தார். இதனால் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, முகமது பின் நயீப்பின் இயக்கங்கள் தடைசெய்யப்பட்டு பின்னர் கண்காணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சல்மான் என்ன செய்கிறார்
இந்நிலையில் ராஜா உயிருடன் இருக்கும்போது அவரது குடும்பம் முகமது பின் சல்மானை எதிர்க்க வாய்ப்பில்லை என்று சவுதி உள்நாட்டினரும் மேற்கத்திய நாட்டு தூதர்களும் கூறுகிறார்கள், மன்னர் சல்மான் தனது மகனுக்கு ஆட்சியின் பெரும்பாலான பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார், ஆனால் இன்னும் வாராந்திர அமைச்சரவைக் கூட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களை சந்தித்து வருகிறார்.
யாரையும் விட்டுவைப்பதில்லை
சவுதியில் அதிகாரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், தனக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும அவர்களை உடனே கைது செய்துவிடுவார். இவர் கடந்த 2017ம் ஆண்டு சவுதி இளவரசர்கள், மதகுருக்கள், அமைச்சர்கள், மற்றும் தொழில் அதிபர்களை சொகுசு விடுதியில் அடைக்க உத்தரவிட்டார். இதேபோல் தன்னை விமர்சித்து கட்டுரை எழுதி வந்த அமெரிக்க இதழின் பத்திரிக்கையாளர் ஜமால் கசோகியை துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொள்ள உத்தரவிட்டதாக சர்ச்சையில் சிக்கினார். இதனால் பல நாடுகள் முகமது பின் சல்மானுக்கு கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ததாக தனது சித்தப்பா மற்றும் அவரது மகன் உள்பட 3 பேரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.