மெக்காவில் உம்ரா செய்ய சவுதி அரேபியா அரசு அனுமதி... படிப்படியாக தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்..!
ரியாத்: இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவிற்கு வர யாத்ரீகர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது சவுதி அரேபியா அரசு.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மெக்கா மற்றும் மதீனா ஆகிய இரண்டு தலங்களிலும் யாத்ரீகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ரமலான் மாதத்தில் கூட கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்திய அந்நாட்டு அரசு மிக சொற்ப எண்ணிக்கையில் மட்டும் ரமலான் மாத இரவு சிறப்புத் தொழுகையில் (தராவீஹ் தொழுகை) பங்கேற்க அனுமதி அளித்தது.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த தொடங்கியுள்ள சவுதி அரேபியா, முதற்கட்டமாக இன்று முதல் 30 % யாத்ரீகர்கள் மெக்காவில் உம்ரா செய்ய (சிறப்பு வழிபாடு) அனுமதி வழங்கியுள்ளது. அடுத்தக்கட்டமாக அக்டோபர் 18 முதல் 75% யாத்ரீகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
மேலும், நவம்பர் 1-ம் தேதி முதல் கட்டுப்பாடுகளில் படிப்படியாக இன்னும் கூடுதல் தளர்வுகள் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 100% யாத்ரீகர்களுக்கு உம்ரா செய்ய அனுமதி வழங்குவது பற்றி இப்போதும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கொரோனா தொற்று பரவுவது முற்றிலும் முடிவு வரும் போது அது பற்றி முடிவெடுக்கக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
மெக்காவில் உம்ரா செய்வதற்காக (சிறப்பு வழிபாடு) சவுதி அரேபியாவில் வசிக்கக்கூடிய வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டினர் என இதுவரை ஒரு லட்சத்து எட்டாயிரம் பேர் முன் அனுமதி பெற்றிருப்பதாகவும் நபர் ஒருவருக்கு மூன்று மணி நேரம் அனுமதி அளிக்கப்படுவதாகவும் சவுதி அரசு அறிவித்துள்ளது.
நாள்தோறும் 6 ஆயிரம் பேருக்கு மட்டும் முதற்கட்டமாக மெக்காவில் உள்ள காஃபாவை சுற்றி வர அனுமதி தரப்பட்டிருக்கிறது. உரிய சமூக இடைவெளியை கண்காணிப்பதுடன் கிருமி நாசினிகளை கொண்டு அடிக்கடி தூய்மைப் படுத்தும் பணிகளையும் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.