சவுதி மன்னருக்கு உடல்நலம் பாதிப்பு... மருத்துவமனையில் சிகிச்சை... பதவிக்கு அடுத்தது யார்?
ரியாத்: சவுதி அரேபியா மன்னர் 84 வயது சல்மான் பின் அப்துல்அசிஸ் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பித்த நீர் பையில் ஏற்பட்டு இருக்கும் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
உலகிலேயே இன்று அதிகளவில் எரிவாயு எண்ணெய் ஏற்றுமதி செய்து வரும் சவுதி அரேபியா மன்னர் சல்மான் பின் அப்துல், அமெரிக்காவுடன் மிகவும் நெருங்கிய உறவு கொண்டு இருப்பவர். இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பித்த நீர் பையில் வீக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும், தற்போது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவின் முடிசூடிக் கொண்ட இளவரசராக இரண்டு ஆண்டுகள் இருந்தவர் சல்மான். இதன் பின்னர் அந்த நாட்டின் துணை பிரதமர் அந்தஸ்திலான பதவி வகித்து வந்தார். தொடர்ந்து அந்த நாட்டின் மன்னரானார். இதற்கு முன்னதாக ரியாத் மண்டலத்தின் ஆளுநராக 50 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி இருக்கிறார்.
இவருக்குப் பின்னர் மன்னராக முடிசூட இருப்பவர் மொஹம்மது பின் சல்மான். இவர்தான் சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் எடுத்து சென்றவர். எண்ணெய் வளத்தில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்து உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதியையும் அதிகரித்தார்.
அணு ஆயுத போர்க்கப்பல்.. அந்தமானுக்கு வருகிறது அமெரிக்காவின் "கில்லர் ஷிப்".. இந்தியா மாஸ்டர் பிளான்!
தற்போது இளவரசர் அந்தஸ்த்தில் இருக்கும் மொஹம்மது பின் சல்மானுக்கு மக்களிடையே நல்ல செல்வாக்கு இருக்கிறது. சமுதாயத்தில் முஸ்லிம்களுக்கு இருந்த பல்வேறு தடைகளை நீக்கியவர். பெண்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்கியவர். பொருளாதாரத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர். இவர் கொண்டு வந்த மாற்றங்களை உலக மக்கள் பெரிய அளவில் விரும்பினர், வரவேற்றனர்.
என்னதான் இதுபோன்ற மாற்றங்களைக் கொண்டு வந்து இருந்தாலும், பத்திரிக்கைகளை அரசின் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது, அரசுக்கு எதிராக கருத்துக்கள் கூறுபவர்கள் மீதான அடக்குமுறை ஆகியவை சவுதி அரேபியா அரசின் மீதான ஜனநாயகத்தின் மீதான கேள்விகளை எழுப்புகிறது.