மக்கள் நம்பிக்கை அதிகரிக்க இதுவே வழி... மக்கள் முன்னிலையில் தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட இளவரசர்
ரியாத்: சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நேற்று கோவிட் -19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.
உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மாடர்னா, ஃபைஸர் உள்ளிட்ட நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஒப்புதல் வழங்கியுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவிலும் பைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இம்மாத தொடக்கத்தில் ஃபைஸரின் கொரோனா தடுப்பு மருந்தின் முதல் தொகுதி சவுதி அரேபியா வந்தடைந்தது.
அடுத்து இந்த நாட்டிலும் பரவிய புதிய வகை கொரோனா... என்ன செய்யப் போகிறது உலக சுகாதார அமைப்பு
தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட இளவரசர்
அதைத்தொடர்ந்து தற்போது அங்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் நேற்று கோவிட் -19 தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டார்.
வருமுன் காப்பதே சிறந்தது
இத்தகவலை உறுதி செய்த அந்நாட்டின் சுகாதார துறை அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் அல்-ரபியா, "தடுப்பு மருந்து குறித்து மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும் வகையில் முதலில் முன்வந்து தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட இளவரசருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது விஷன் 2030 திட்டத்தின்படி, வருமுன் காப்பதே சிறந்தது. தேவையான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதன் மூலமும், மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு முதன்மையான முக்கியத்துவத்தை அளிப்பதன் மூலமும் இதை அடைய முடியும் என்று நம்புகிறேன். மேலும், தற்போதைய சூழ்நிலையில், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்தை மிக விரைவாக மக்களுக்கு வழங்குவதே எங்களின் நோக்கம்" என்றார்.
கொரோனா பாதிப்பு
சவுதி அரேபியாவில் தற்போது வரை 3.61 லட்சம் பேருக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3.52 லட்சம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துவிட்டனர். மேலும், சவுதியில் 6,168 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மக்கள் முன் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட தலைவர்கள்
கடந்த சில நாட்களாகவே பல்வேறு உலகத் தலைவர்களும் பொதுமக்களுக்கு தடுப்பு மருந்து குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மக்கள் முன்னிலையில் தடுப்பு மருந்தை எடுத்து வருகின்றனர். கடந்த வாரம், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தடுப்பு மருந்து எடுத்துக்கொள்வது நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட ஜோ பைடன்
இந்த வார தொடக்கத்தில், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை மக்கள் முன்னிலையில் பெற்றுக்கொண்டார். பின்னர் பைடன் தனது ட்விட்டரில், "இன்று, நான் கோவிட் -19 தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டேன். இதை சாத்தியமாக்க அயராது உழைத்த ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி. நாங்கள் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம்" என்று பதிவிட்டிருந்தார்.