தீவிரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்க வேண்டுமா? முதல்முறை தெளிவான நிலைப்பாடு எடுத்த சவுதி!
ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை தடை செய்யப்பட்ட தீவிரவாதியாக அறிவிப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சவுதி அரேபியா அரசாங்கம் தெரிவித்து உள்ளது.
Recommended Video
ரியாத்: ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை தடை செய்யப்பட்ட தீவிரவாதியாக அறிவிப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சவுதி அரேபியா அரசாங்கம் தெரிவித்து உள்ளது.
சவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மானின் தெற்காசிய பயணம் பெரிய சர்ச்சையை, அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பயணம் காரணமாக சவுதி அரசாங்கம் தினமும் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
இன்று சவுதி வெளியிட்ட அறிக்கையில், தீவிரவாத செயல்களில் ஈடுபடும் எல்லோரையும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட்டு தடை செய்வதோடு அவர்களை தண்டிக்கவும் வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த அறிக்கைக்கு பின் பல காரணங்கள் உள்ளது.
கூட்டறிக்கை
சவுதி முடிஇளவரசர் முகமது பின் சல்மானின் பாகிஸ்தான் வருகைக்கு பின், பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டது. அதில் ''சவுதி தொடங்கி எல்லா நாடுகளும் இந்த தீவிரவாத பிரச்சனைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். ஆனால் தீவிரவாத நடவடிக்கைகளை ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு சென்று தேவையில்லாமல் அரசியலாக்க கூடாது. '' என்று குறிப்பிட்டு இருந்தது.
பிரச்சனை
இந்தியாதான் புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் புகார் அளிக்க திட்டமிட்டு இருக்கிறது. இதனால் சவுதி இந்தியாவை மறைமுகமாக தாக்கித்தான் இப்படி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவிற்கு எதிராக சவுதி பேசுகிறது என்று சர்ச்சை எழுந்தது.
என்ன விளக்கம்
தற்போது இதற்கு சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் அடில் பின் அஹமது விளக்கம் அளித்துள்ளார். அதில், தீவிரவாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் சவுதி உறுதியாக உள்ளது. தீவிரவாத தாக்குதலுக்கு பின்னால் இருப்பவர்களை ஐநாவில் மட்டும் அம்பலப்படுத்த கூடாது. அவர்களுக்கு தண்டனையும் கொடுக்க வேண்டும். நாங்கள் இதில் உறுதியாகி இருக்கிறோம்.
ஏன் அரசியல்
இதை அரசியலாக்க கூடாது என்று கூறியது, சில தீவிரவாதிகளுக்கு சாதகமாக பேசியதாக பொருள் கொள்ளப்பட்டு இருக்கிறது. அது தவறு. சில நாட்டில் எதிர்கட்சிகளை சிலர் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீவிரவாதிகள் போல சித்தரிக்க பார்க்கிறார்கள். அதற்கு எதிராகவே சவுதி குரல் கொடுக்கிறது. இதை வைத்து அரசியல் பழிவாங்கல் நிகழ கூடாது.
மசூத் அசார்
தீவிரவாதிகளை ஐநாவில் நிறுத்தி தண்டனை பெற்று தருவதில் எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாத்தை தடை செய்யப்பட்ட தீவிரவாதியாக அறிவிப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் அந்த முடிவிற்கு எப்போதும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.