மெக்கா தொழுகையில் கண்ணீர் வடித்த இமாம்... கொரோனாவால் வரலாறு காணாத தாக்கம்!
ரியாத்: இஸ்லாமியர்களின் புனித தலமான மக்காவில் தொழுகை நடத்திய இமாம் (மதகுரு) தனது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வடித்து கதறிய காட்சி இஸ்லாமிய பெருமக்களின் உள்ளத்தை உலுக்கும் வகையில் உள்ளது.
எப்போதும், எந்நேரமும், மனிதகடலாக காட்சியளிக்கும் மக்கா நகரம் கடந்த ஒரு வாரகாலமாக கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் வரலாறு காணாத மாற்றத்தை சந்தித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் யாத்ரீகர்களுக்கு சவூதி அரேபியா அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளதால் மக்கா மற்றும் மதீனா ஆகிய இரு புனித தலங்களும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
ஹஜ் கடமை
உலகில் உள்ள ஒவ்வொரு இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஹஜ்ஜும் ஒன்றாகும். அதவாது சவூதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள கஃபத்துல்லா(KAFATHULLAH) எனப்படும் புனித கட்டிடத்தை வலம் வந்து பாவமன்னிப்பு பெறுவதற்காக உலகெங்கும் இருந்து ஆண்டுதோறும் கோடிக்கணக்கான யாத்ரீகர்கள் அங்கு குவிவார்கள். அலை அலையாய் வரும் மக்கள் கடலை சவூதி அரசு கனிவாக உபசரித்து சொந்தநாடுகளுக்கு மிக பாதுகாப்பாக திருப்பி அனுப்பும். ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் வருகை தந்தாலும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை எந்த குறையுமின்றி சவூதி அரசு ஏற்பாடு செய்யும்.
கொரோனா
இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான துல்ஜஹ் மாதத்தை தவிர மற்ற மாதங்களில் உம்ரா செய்வதற்காக மக்கா மற்றும் மதினா நகரங்களுக்கு எப்போதும் யாத்ரீகர்கள் வருகை தருவது வழக்கம். ஒட்டுமொத்த உலகநாடுகளில் இருந்தும் அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் ஜித்தா விமான நிலையத்திற்கு வருகை தருவதும், புறப்படுவதும் சாதாரணமாக நிகழக்கூடிய ஒன்று. ஆனால் கொரோனா வைரஸ் பீதி காரணமாக உம்ரா பயணிகளுக்கு சவுதி அரசு தற்காலிக தடை விதித்து அனுமதி மறுத்துள்ளது. இதனால் எந்நேரமும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத வகையில் இயங்கிய ஜித்தா விமான நிலையத்தில் நிசப்தம் நிலவுகிறது.
லட்சக்கணக்கில்
மக்காவில் உள்ள கஃபத்துல்லாஹ்வில் ஐந்து வேளை தொழுகைக்கும் லட்சக்கணக்கானோர் அணி அணியாய் தங்களை வரிசைப்படுத்தி நின்று தொழுவது வழக்கம். இந்த நடைமுறை இன்றோ, நேற்றோ தொடங்கியது அல்ல.. பல நூறு ஆண்டுகளாக தொண்டு தொட்டு தொடரும் ஒரு வரலாற்று நிகழ்வில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பது, அங்குள்ள இமாம்கள் (மதகுருக்கள்), பொதுமக்கள் ஆகியோருக்கு மிகுந்த வேதனையையும், கவலையையும் தந்துள்ளது. மக்காவில் இப்படி ஒரு நிலை வரும் என எதிர்பார்க்காத இமாம் ஒருவர், தொழுகை நடத்திக்கொண்டிருக்கும் போதே தனது துயரத்தை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வடித்தவாறே அதனை நடத்தியுள்ளார்.
குணம்பெற
கொரோனா பாதிப்பிலிருந்து உலக மக்களை பாதுகாக்கும் படியும், பாதிக்கப்பட்டோர் குணமடைய வேண்டியும் சிறப்பு து ஆக்கள் மக்கா மற்றும் மதீனாவில் கேட்கப்படுகின்றன. விரைவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் என நம்பிக்கை உள்ளதாகவும், அதன் பின்னர் வழக்கம் போல் மக்கா மற்றும் மதினாவுக்கு வரும் புனித பயணிகளுக்கு அனுமதி தரப்படும் எனவும் சவூதி அரேபியா அரசாங்கள் தெரிவித்துள்ளது.