சென்னையில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை
சென்னையில் ஒரே நேரத்தில் சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு என தொடர் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னை: சென்னையில் ஒரே நேரத்தில் சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு என 14 இடங்களில் கொள்ளை நடந்தது.
மோட்டார் சைக்கிள்களில் மின்னல் வேகத்தில் செல்லும் இளைஞர்கள் பெண்களிடம் இருந்து தாலி செயின், செயின் பறிப்புகளில் ஈடுபடுகின்றனர். இதனால் பெண்கள் விபத்துகளிலும் சிக்குகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவங்களில் ஆண்களுக்கும் நடைபெறுகிறது. அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த பொருட்கள் பறிக்கப்படுகின்றன. நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னையில் 14 பேரிடம் செயின் மற்றும் செல்போன்கள் பறிக்கப்பட்டன.
புரசைவாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு, விருகம்பாக்கம், அயனாவரம், சிந்தாதிரிப்பேட்டை, திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து வழிப்பறி கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர்.
மேற்கண்ட இடங்களில் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அதாவது அதிகாலை 3 மணி வரை ரூ.30 ஆயிரம் ரொக்கம், 15 பவுன் தங்க நகை, ரூ.2 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
திருவொற்றியூர், சாத்தான் காட்டு பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றில் பதிவான கேமிரா காட்சி போலீசுக்கு கை கொடுத்தது. பார்த்திபன், மணி ஆகிய 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே வேப்பேரி பகுதியில் கைவரிசை காட்டிய 2 கொள்ளையர்களும் சிக்கினர். சித்தார்த் என்ற வாலிபர் தலைமையில் அப்பகுதியில் கூட்டாக இவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. சிட்லப்பாக்கத்தில் விக்னேஷ் என்ற வாலிபர் பிடிபட்டார். மாங்காட்டிலும் 2 வழிப்பறி கொள்ளையர்கள் சிக்கினர். மேலும் 30 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கொள்ளை சம்பவங்களை தடுக்க முடியவில்லை.
சென்னையில் தொடரும் செயின் பறிப்பு மற்றும் செல்போன் திருட்டு சம்பவங்களால் பொது மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். சாலையில் நடந்து செல்லுவதற்கே அச்சமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.