தமிழ்நாட்டில் கிசான் முறைகேடு...சேலத்தில்...10,700 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!!
சேலம்: பிரதமரின் நிதி உதவி திட்டத்தின் கீழ், ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் மட்டும் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி 10,700 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கபட்டுள்ளன.
ஏழை விவசாயிகளுக்கான இந்தத் தொகை மூன்று தவணைகளாக தலா ரூ.2 ஆயிரம் என்ற வகையில் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு வேளாண்மை துறை மூலம் செலுத்தப்பட்டு வருகிறது.
சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும் - வானிலை மையம்
புயலை கிளப்பும் முறைகேடு
இந்த திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்களும் பயனாளிகள் என்று சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்காக போலி ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெரிய அளவில் இந்த வகையில் மோசடி நடந்திருப்பது தற்போது புயலைக் கிளப்பியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு முறைகேடாக பயன் பெற்றவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம்
கடலூர் மாவட்டத்திலும் கிசான் திட்டத்தில் முறைகேடு நடந்து இருப்பது கண்டறியப்பட்டு, வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. முறைகேடாக நிதி உதவி பெற்றவர்களிடம் இருந்து முதல் கட்டமாக ரூ.4 கோடியே 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும், இதில் தொடர்புடைய 13 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் முறைகேடு செய்தவர்களிடம் இருந்து முதல் கட்டமாக ரூ.4½ கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
பணி நீக்கம்
பெரும்பாலான மாவட்டங்களில் இந்த முறைகேடு நடந்து இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டுள்ளது. தற்போது, சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் ஒன்றியத்தில் சுமார் 600 பேரை போலியாக இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் ஆத்தூர் வேளாண்மைத்துறை அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் ராஜாவுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வங்கிக் கணக்கு முடக்கம்
இத்துடன் சேலம் மாவட்டம் முழுவதும் இந்த முறைகேடு நடந்து இருப்பதும், இதில் இந்த மாவட்டத்தைச் சாராதவர்கள் 5 ஆயிரம் பேர் இணைக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சேலம் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்து 700 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
வழக்குப் பதிவு
சேலம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன், சேலம் சி.பி.சி.ஐ.டி. போலீசில் இதுகுறித்து புகார் அளித்து இருந்தார். அதன்பேரில், 51 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணன் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
விசாரணை
இதுகுறித்து சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் கூறுகையில், விவசாயிகளுக்கான கிசான் உதவி திட்டத்தில் முறைகேடு நடந்ததாக வந்த புகாரின் பேரில் 10 ஆயிரத்து 700 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ரூ.4 கோடி வரை மோசடி நடந்துள்ளது. இதில், இதுவரை ரூ.1 கோடியே 20 லட்சம் திரும்ப பெறப்பட்டுள்ளது'' என்றார்.
32,000 பேர் முறைகேடு
திருவண்ணாமலையில் இந்தத் திட்டத்தின் கீழ் 2.25 கோடி முறைகேடு நடந்து இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மாவட்டத்தில் மட்டும் விவசாயிகள் அல்லாதோர் 32,000 பேர் நிதி உதவி பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்டக் கலெக்டர் கூறுகையில், ''கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து முறைகேடாக நிதி பெற்றவர்களின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படும்'' என்று தெரிவித்து இருந்தார்.
நீதிமன்ற விசாரணை
இந்த முறைகேடு தொடர்பாக ஜீவா என்ற 35 வயது பெண்ணை சிபிசிஐடி போலீசார் கடந்த வெள்ளிக் கிழமை கைது செய்தனர். இவர் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.