சேலத்தில் துணிகரம்.. துணி கடைக்குள் புகுந்து அரிவாள் வெட்டு.. கோர்ட்டில் சரணடைந்த 2 இளைஞர்கள்
ஜவுளி கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளனர்
சேலம்: துணிக்கடைக்காரரை கடைக்குள் புகுந்து அரிவாளால் வெட்டிய 2 இளைஞர்கள் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
பெரியசோரகையை சேர்ந்த வேலு தங்கமணி என்பவர், நங்கவள்ளியில் சொந்தமாக ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 17ஆம் தேதி இவரது கடைக்கு 2 இளைஞர்கள் துணி வாங்குவது போல் வந்தனர்.
வேலு தங்கமணியிடம் பேச்சு கொடுத்தவாறே டி-ஷர்ட் வாங்கினர். அதற்கு வேலு தங்கமணி பணம் கேட்கவும், திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டி தப்பி ஓடினர்.
சேலத்தில் துணிக்கடையில் புகுந்து உரிமையாளரை அரிவாளால் வெட்டும் வீடியோ வைரல் #salem #சேலம் pic.twitter.com/ZlAJYnd7Oa
— Oneindia Tamil (@thatsTamil) July 21, 2019
ரத்த வெள்ளத்தில் கிடந்த வேலு தங்கமணியை ஜவுளி கடை ஊழியர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதல் சம்பந்தமாக போலீசாரும் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர். கடையில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்த இந்த கொலை முயற்சி வீடியோவை வெளியிடவும், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வேலு தங்மணியை வெட்டியது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், மணிகண்டன் என்பதை கண்டறிந்த போலீசார் இருவரையும் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த இருவரும் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தனர். இதையடுத்து, இருவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.