காதை துளைத்த மெஷின் சத்தம்.. பேரன் விழுந்தது தெரியாத தாத்தா.. தண்ணீர் தொட்டியில் மிதந்த உடல்!
தண்ணீர் தொட்டிக்குள் 2 வயது குழந்தை தவறி விழுந்து இறந்துள்ளது
சேலம்: மிஷின் சத்தம் காதை துளைத்தது.. அதனால்தான் பேரன் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்ததுகூட அங்கேயே இருந்த தாத்தாவால் அறிய முடியவில்லை!
ஓமலூர் அருகேயுள்ள கேஆர் தோப்பூர் என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வருபவர் பழனிகவுண்டர். இவர் கோட்டைமேடு என்ற இடத்தில் கயிறு திரிக்கும் மில்லில் வேலை பார்க்கிறார். இவரது மகன் கார்த்திக். பூங்கொடி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
இதில், தமிழரசு என்ற குழந்தைக்கு 2 வயதாகிறது. இந்த குழந்தைதான் தாத்தாவுக்கு உயிர். எப்பவுமே வேலைக்கு கிளம்பும்போது தமிழரசு விடவே மாட்டானாம். இன்றும் அப்படித்தான் பழனிகவுண்டர் கிளம்பும்போது குழந்தை அழுதிருக்கிறான். அதனால், தன்னுடனேயே வேலைக்கு தூக்கி வந்துவிட்டார்.
இந்த மில்லில் கயிறு திரிக்க பயன்படுத்தும் நார்களை ஊறவைக்கும் நீர் தொட்டி உள்ளது. இதற்கு பக்கத்தில் குழந்தை விளையாடிக் கொண்டே இருந்தான். எதிர்பாராத விதமாக இந்த தொட்டியில் தவறி விழுந்துவிட்டான். ஆனால், கயிறு திரிக்கும் மெஷின்களின் சத்தத்தால் குழந்தை தொட்டிக்குள் விழுந்ததும், துடித்ததும் தாத்தாவுக்கு தெரியவில்லை.
நாங்க சாகறோம்.. அவங்களை தொல்லை பண்ணிடாதீங்க.. ஒரே கயிற்றில் பறி போன இரு உயிர்கள்
ரொம்ப நேரம் கழித்து, குழந்தையை காணோம் என்று தேடியபோதுதான் தொட்டிக்குள் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ந்தனர். அலறி அடித்து கொண்டு ஆஸபத்திரிக்கு தூக்கி சென்றும், தமிழரசு ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.
இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரியவர்களின் அஜாக்கிரதையால் இப்படி குழந்தைகள் அநியாயமாக உயிரிழந்து வருவது தமிழக மக்களை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கி உள்ளது.