பெத்தா இப்படி பிள்ளையைப் பெக்கணும்டா.. போலீஸ் ஜீப்பில் டிக்டாக்.. தூக்கி உள்ளே போட்ட போலீஸ்!
சேலம்: "பெத்தா இப்படி ஒரு பிள்ளையை பெக்கணும்டா" என்ற டயலாக் சத்தம் கேட்க, சிங்கம் பட சூர்யா போல போலீஸ் ஜீப்பிலிருந்து நடந்து வருவதுபோல வீடியோ வெளியிட்ட 2 பேரை போலீசார் கொத்தாக பிடித்துகொண்டு போய்போட்டனர்!!
இப்பவெல்லாம் இளசுகளுக்கு டிக்-டாக் மோகம் அதிகரித்துவிட்டது. டான்ஸ், ஆட்டம், பாட்டம், நடிப்பு என கலக்கலாக உள்ளது இந்த டிக்-டாக் ஆப். அதனால் இதன் பயன்பாட்டாளர்களும் அதிகம். ஆனால் சிலர் இதில் ஆர்வ கோளாறினால் வரம்புமீறி நடந்து கொண்டு கம்பி எண்ணும் நிலைக்கும் ஆளாகிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு சிவகாசியில் போலீஸ் ஸ்டேஷனில் வேற ஒரு வேலையாக சென்ற இளைஞர்கள் 4 பேர், திடீரென் ஸ்டேஷன் வாசப்படியில் "சிறுத்தை" பட வசனத்தை பேசி நடித்து அதில் டிக்டாக்கில் வெளியிட அத்தனை பேரும் சிறைக்கு போனார்கள்.
போலீஸ் ஜீப்
இப்போது அதுபோலவே இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது. ஆத்தூர் நகர போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டருக்கு பொலிரோ ஜீப் ஒன்று தரப்பட்டுள்ளது. இந்த ஜீப்பின் ரேடியேட்டரில் பிரச்சனை என்பதால், நரசிங்கபுரத்தில் உள்ள ஒரு மெக்கானிக் ஷெட்டில் கொண்டு வந்து விட்டார்கள்.
சிங்கம் சூர்யா
இந்த ஜீப்பை பார்த்ததும், அங்கிருந்த மெக்கானிக்குகள் சந்தோஷ்குமார் மற்றும் அவரது நண்பர் சபரிநாதனுக்கு ஆசை வந்துவிட்டது. அதனால் தங்களையும் ஒரு போலீஸ்காரராகவே அதாவது சிங்கம் சூர்யாயாவை போல தங்களையும் 2 பேரும் நினைத்துகொண்டார்கள்.
விஜயகாந்த் வசனம்
அந்த ஜீப்பை வைத்து அதற்கு முன் நடித்தும், பாட்டு பாடியும் வீடியோ எடுத்தார்கள். ‘பெத்தா இப்படி ஒரு பிள்ளையை பெக்கணும்டா' என்ற வசனம் பின்னணியில் ஒலிக்க, இருவரும் ஜீப்பிலிருந்து இறங்கி வருகிறார்கள். அதனால், பின்னணியில் விஜயகாந்த் நடித்த தவசி பட பாடலை ஒலிக்கிறது. இப்படியெல்லாம் வீடியோ எடுத்து அதை டிக்டாக் ஆப்பில் பதிவிட்டும் விட்டார்கள். சில நாட்கள் கழித்துதான் இந்த வீடியோ வைரலானதும் ஆத்தூர் போலீசார் அதிர்ந்து போனார்கள்.
ஜாமீனில் விடுதலை
பிறகு அந்த ஜீப் ஓட்டுநர் சிவலிங்கம் அளித்த புகாரின்பேரில் விசாரணையில் போலீசார் ஈடுபட்டு, ரிப்பேர் செய்வதை விட்டுவிட்டு இந்த தேவையில்லாத வேலையை பார்த்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும் அரசுக்கு எதிரான குற்றத்தை தூண்டுதல், தொழில் நுட்ப குற்றத்தடுப்பு ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அதன்பிறகு இருவரும் கோர்ட்டில் நிறுத்தப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.