வயக்காட்டில் சடலம்.. பியூட்டி பார்லர் பெண் ஊழியர் கொலையா? ஆத்தூரில் பரபரப்பு!
23 வயது இளம் பெண் மரணம் குறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது
சேலம்: நள்ளிரவு வயக்காட்டில் சடலமாக விழுந்து கிடந்தார் இளம்பெண்.. இவரை கொலை செய்தார்களா, அல்லது தற்கொலையா என்ற விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஊராண்டி வலசு காட்டுக் கொட்டகையை சேர்ந்தவர் குப்புசாமி.. இவர் ஒரு லாரி டிரைவர்.. இவர்ருடைய மனைவி சசிரேகா. இவர்களுக்கு 23 வயது மகள் கவுசிகா.
3 வருஷங்களுக்கு முன்பு கவுசிகாவுக்கும், சின்ன சேலத்தை சேர்ந்த சரவணனுக்கும் கடந்த கல்யாணம் நடந்தது. இது ஒரு காதல் திருமணம்.திருப்பூர் பகுதியில் வசித்து வருகிறார்கள். ஒரு வயதில் பூசிகா என்ற பெண் குழந்தை இருக்கிறாள். சரவணன் அலுமினிய கதவுகள் செய்யும் தொழில் செய்து வந்தார். கவுசிகாவும் அதே பகுதியில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்தார்.
தகராறு
கல்யாணம் ஆகி 3 வருடங்கள் ஆனாலும் தம்பதிக்குள் நிறைய சண்டை வந்துள்ளது.. அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதை தங்கள் வீட்டிலும் கவுசிகா சொல்லி வந்துள்ளார். சமீபத்திலும் அப்படி தகராறு வந்துவிடவும், கவுசிகா அம்மா வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு வந்திருந்தார்.
மயங்கி கிடந்தார்
நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியே போன கவுசிகா திரும்பி வரவே இல்லை.. அதனால் பதறி போன பெற்றோர், கவுசிகாவை தேடி சென்றனர்.. அப்போது ஒரு வயக்காட்டில் கவுசிகா மயங்கி விழுந்து கிடந்தார்.. இதை பார்த்து அலறிய குடும்பத்தினர், வாழப்பாடியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால், கவுசிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொல்லிவிட்டனர்.
மர்மம்
இதனால் அதிர்ச்சி அடைந்த இது சம்பந்தமாக மல்லியக்கரை போலீசில் புகார் கொடுத்தனர். அதில் தங்கள் பெண்ணின் சாவில் மர்மம் உள்ளது.. யாரோ அடித்து கொன்றிருக்கிறார்கள்.. முகம், கால்களில் காயங்கள் உள்ளன.. நடவடிக்கை வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
கொலையா?
இதன் அடிப்படையில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஆத்தூர் உதவி கலெக்டரின் விசாரணையும் நடந்து வருகிறது. பியூட்டி பார்லரில் வேலை பார்த்ததால், கவுசிகாவுக்கு ஏதாவது பிரச்சனையா? அல்லது குடும்ப தகராறா? யாராவது கொலை செய்தார்களா? அல்லது தற்கொலையா? என்றெல்லாம் விசாரணை நடந்து வருகிறது.