திருவண்ணாமலை, திருச்சி, சேலத்தில் புதிதாக 3 கால்நடை தீவன ஆலை.. முதல்வர் அதிரடி அறிவிப்பு
சேலம்: தரமான கால்நடை தீவனம் கிடைக்க வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, சேலம் மாவட்டத்தில் புதிதாக மூன்று கால்நடை தீவன உற்பத்தி மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், தலைவாசலில் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவுரையாற்றினார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
கறவை மாடு
நீடித்த நிலையான வளர்ச்சியை நாம் அடைய கிராம பொருளாதாரத்தை ஊக்குவிப்பது மிகவும் அவசியமாகும். கிராமப்புற பொருளாதாரம் உயர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா அரசு அறிமுகம் செய்தது. தமிழக அரசு வழங்கிய கோழிகள், கறவை மாடுகள், செம்மறியாடுகள் பல நூறாக பெருகிவிட்டது. அதனால் லட்சக்கணக்கான லாபத்தை கிராம மக்கள் பெற்றுள்ளனர். 3 திட்டங்கள் மூலம் பலம் பெற்றவர்கள் இன்றைய தினம் கவுரவிக்கப்படுவார்கள். 20வது கால்நடை கணக்கெடுப்பில் வெள்ளாடுகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 21 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது.
கோழி எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்
இந்திய அளவில் கோழிகள் எண்ணிக்கையில் முதலாவது இடத்தை தமிழகம் பெற்றுள்ளது. தேசிய அளவில் செம்மறியாடுகள் எண்ணிக்கையில், தமிழகத்திற்கு, ஐந்தாவது இடம், வெள்ளாடுகள் எண்ணிக்கையில் 5வது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்கா சென்றபோது அங்குள்ள கால்நடை பூங்காவை பார்த்து வியந்தேன். அதே தொழில்நுட்பம் சேலம் தலைவாசல் கால்நடை பண்ணையில் அறிமுகம் செய்யப்படும். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், திருநெல்வேலியில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதிக பசுக்கன்றுகளை உற்பத்தி செய்ய உதகை மாவட்டத்தில் விந்து பிரிக்கும் வசதி உள்ளது. விரும்பிய பாலின மாடுகளை அவர்கள் கேட்டு பெற்றுக்கொள்ள முடியும்.
ஆவின் பால் நிறுவனம்
பால் உற்பத்தியாளர்களுக்கு கணிசமான வருமானம் கிடைக்கும் வகையில், பசும்பால் மற்றும் எருமை பால் விற்பனை கொள்முதல் விலையை உயர்த்தி உள்ளோம். எட்டு புதிய மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கூட்டுறவு சங்கங்களுக்கு சமீபத்தில் தேர்தல் நடத்தி கூட்டுறவுக்கு வலிமை சேர்த்துள்ளோம். பால் உற்பத்தியாளர்களுக்கு கணிசமான பெருகிவரும் பால் உற்பத்தியை சந்தைப்படுத்தும் வகையில் மக்கள் விரும்பும் வண்ணம், கேரட், ஆப்பிள், அன்னாசி, சாக்லேட் போன்ற சாக்லட் வகைகளை ஆவின் பால் நிறுவனம் தயாரித்து வருகிறது.
மதுரையில் மீண்டும் தீவன தொழிற்சாலை
சிங்கப்பூர், ஹாங்காங், கத்தார், துபாய் போன்ற வெளிநாடுகளில் ஆவின் பால் விற்பனை நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை 55 கோடி ரூபாய் செலவில் மதுரையில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றும் 45 கோடி ரூபாய் செலவில் ஆணையூர் நறுமண பால் உற்பத்தி மையம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. ஈரோடு பால்பண்ணையில் 150 மெட்ரிக் டன் அளவில் தானியங்கி தீவன உற்பத்தி தொழில்நுட்ப தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த மையம் விரிவாக்கம் செய்யப்படும். புதிதாக ஒரு கால்நடை தீவன பண்ணை விருதுநகரில் அமைக்கப்பட்டு வருகிறது. மதுரையில் உள்ள கால்நடை தீவனத் தொழிற்சாலை மீண்டும் செயலாக்கத்திற்கு கொண்டுவரப்படும்.
3 மாவட்டங்கள்
தரமான கால்நடை தீவனம் கிடைக்க வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, சேலம் மாவட்டத்தில் புதிதாக மூன்று கால்நடை தீவன உற்பத்தி மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துக் கொள்கிறேன். தரமான தீவனங்களை கால்நடைகளுக்கு கொடுத்தால்தான் அதிக பால் கறக்கும். அந்தவகையில் கூடுதலாக மூன்று மாவட்டத்தில் கால்நடை தீவன தொழிற்சாலைகளை அமைக்க உள்ளோம். கடந்த எட்டு ஆண்டுகளில் 58 நவீன பாலங்கள் அமைக்கப்பட்டு அனைத்து பால் பொருட்களும் எளிதில் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. மீன் உற்பத்தியை பொருத்தளவில் 148 கோடி ரூபாய் செலவில் பூம்புகாரில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது.
நானும் விவசாயி
விவசாயி கடுமையாக உழைக்க கூடியவர். ரத்தத்தை வியர்வையாக மண்ணில் சிந்தி உழைக்க கூடியவர். நானும் ஒரு விவசாயி என்பதால், வேளாண் பெருமக்களின் பிரச்சினைகளை அறிந்து, நடவடிக்கை எடுப்பதன் காரணமாக, வேளாண் துறையில் பல முத்திரைகளை அரசு பதித்து வருகிறது. 2016-17ம் நிதியாண்டில் கடுமையான வறட்சி நிலவியது. வறட்சி நிவாரணமாக ஆட்சியேற்றதும் 2000 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கியது, அம்மா அரசு. எந்த அரசும் வழங்க முடியாத அளவுக்கு, பயிர்க்கடன் வழங்கியதும், இந்த அரசுதான். மொத்தம் ரூ.48 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது. காப்பீடு மூலம் அதிகப்படியாக இழப்பீடு பெற்றுத் தந்ததும் இந்த அரசுதான். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.