வெளிநாட்டு அமைப்பிடமிருந்து ரூ 300 கோடி பரிசு.. விவசாயியிடம் ரூ 1.17 கோடி மோசடி செய்த கும்பல் கைது
Recommended Video
சேலம்: வெளிநாட்டில் உள்ள கிறிஸ்துவ அமைப்பில் இருந்து 300 கோடி ரூபாய் பரிசுத்தொகை விழுந்துள்ளதாக கூறி விவசாயிடம் ஒரு கோடியே 17 லட்சம் மோசடி செய்த 4 பேரை சேலம் மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அருள்ஜோதி. விவசாயம் செய்து வரும் அருள்ஜோதியிடம் அதே ஊரைச் சேர்ந்த 7 பேர் சேர்ந்த கும்பல் நன்கு பழகி வெளிநாட்டில் உள்ள கிறிஸ்தவ அமைப்புகளில் இருந்து தங்களுக்கு 300 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளதாக கூறினர்.
அந்தப் பணம் கிடைப்பதற்கு ஆவணங்கள் தேவைப்படுவதால் பணம் செலவாகும் எனக் கூறி அருள்ஜோதியிடம் 40 லட்ச ரூபாயை வாங்கி உள்ளனர். இந்த நிலையில் முன்விரோதம் காரணமாக அருள்ஜோதி கொலை செய்யப்பட்டார்.
கிறிஸ்துவ அமைப்பு
இதனைத் தொடர்ந்து அருள்ஜோதியின் உறவினரான விவசாயி பழனிவேல் என்பவரிடம் அருள்ஜோதியின் நண்பர் எனக் கூறி அறிமுகமாகி தங்களுக்கும் 300 கோடி ரூபாய் வெளிநாட்டில் உள்ள கிறிஸ்தவ அமைப்பிலிருந்து பரிசுத்தொகை விழுந்துள்ளது.
10 லட்சம்
இதற்கு செலவு செய்ய சிறிது பணம் தேவைப்படுகிறது எனக் கூறி கடந்த சில மாதங்களாக 60 லட்ச ரூபாயை பெற்றுள்ளனர். தொடர்ந்து பழனிவேலிடம் தங்கள் தொகை வந்து விட்டதாகவும் அதனைப் பெறுவதற்கு மிகப்பெரிய விழா நடத்த வேண்டும் என்றும் அதற்கு பத்து லட்ச ரூபாய் தேவைப்படுகிறது என அந்த கும்பல் தெரிவித்துள்ளனர்.
தீவிரம்
இதனால் சந்தேகம் அடைந்த விவசாயி பழனிவேல் சேலம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோசடி செய்த கும்பலை தேடி வந்த நிலையில் நேற்று சேலம் ஐந்து ரோடு பகுதியில் சிவகுமார், நிசாந்த், அஸ்வின், மாதேஷ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மீதமுள்ள 3 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பணம் பறிக்கும்
இதுகுறித்து சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையாளர் செந்தில் குமார் கூறும்போது, பரிசுத்தொகை விழுந்துள்ளது, ஆன்லைன் வர்த்தகம் என பல்வேறு வகைகளில் ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் மோசடி கும்பல் ஈடுபட்டு வருவது அதிகரித்து உள்ளது. எனவே ஏமாற்றி மோசடி செயலில் ஈடுபடுபவர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.