மண்ணெண்ணெய் பாட்டிலுடன் கலெக்டர் ஆபிசுக்கு வரும் மக்கள்.. சேலத்தில் அடுத்தடுத்து நடந்த ஷாக்!
சேலம்: சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து இரண்டு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்போதெல்லாம் மக்கள் தங்கள் குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டாலோ அல்லது, பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஏமாற்றத்தை சந்தித்தாலோ காவல்துறையில் முறைப்டி புகார் அளிக்கிறார்கள். ஆனால் சிவில் பிரச்சனைகளும் இருப்பதால் அதற்கு உடனே தீர்வுகள் கிடைப்பதில்லை.
இதனால் வேதனை அடையும் மக்கள் உடனே கலெக்டர் ஆபிஸில் சென்று முறையிடுகிறார்கள். அங்கும் ஒரிருமுறை முறையிட்டு பார்க்கும் மக்கள், தீர்வு கிடைக்க தாமதம் ஆனால் உடனே கலெக்டர் ஆபிஸ் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்கிறார்கள்.
கலெக்டர் ஆபிஸில் பிரச்சனை
இதற்காக கலெக்டர் ஆபிசுக்குள் வரும் போதே சிலர் மறைத்துவைத்து மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து வருகிறார்கள். தங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று கூறி அங்கேயே தீக்குளிக்க முயற்சி செய்கிறார்கள். இதை பார்க்கும் அதிகாரிகள் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி அழைத்து சென்று விசாரணை நடத்துகிறார்கள். இதுதான் திங்கள்கிழமைகளில் மாவட்டம் தோறும் கலெக்டர் ஆபிஸில் நடந்து வருகிறது.
சேலம் கலெக்டர் ஆபிஸ்
அப்படித்தான் சேலத்திலும் இன்று இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். மாற்றுத்திறனாளியான இவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தன்னை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தனது தாயுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்த ரமேஷ் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து இருவர் மீதும் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
தீக்குளிக்க முயற்சி
இதே போல சேலம் பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி பழனி என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை அபகரித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தனது மனைவி மற்றும் பேரன், பேத்தியுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தவர் திடீரென அனைவரின் மீதும் மண்ணெண்ணை ஊற்றி குடும்பத்தோடு தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதையடுத்து அந்தகுடும்பத்தினரையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆபத்தான முயற்சி
சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து இரு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தங்களுக்கு தீர்வு கிடைக்காது என்ற விரக்தியில் சில தவறான முடிவுகளை எடுக்க முயற்சி செய்வது ஆபத்தான நிலைக்கு வித்திடும். எந்த சூழலிலும் தற்கொலைக்கு முயற்சிப்பது கோழைத்தனமானது. தவறானதும் கூட. நிச்சயம் தவிர்க்க வேண்டிய செயல் இது. போலீசார் கடுமையாக சோதனை செய்து மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து வருவதை தடை செய்ய வேண்டும்.