டாக்டரை பார்த்ததும் கோபம்.. காளியப்பனை மிதித்தே கொன்ற ஆண்டாள் யானை.. சேலத்தில் ஷாக்
சேலம்: சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஆண்டாள் யானைக்கு திடீரென மதம் பிடித்ததால் பாகனை மிதித்துக் கொன்றது.
மயக்க ஊசி செலுத்தி யானையை கட்டுப்படுத்திய மருத்துவ குழு மற்றும் வனத்துறை குழுவினர் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாகனின் உடலை மீட்டனர்..
சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா விளங்குகிறது. இந்த வன உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்காக யானை, மான், முதலை, பாம்பு, பறவை வகைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து கடந்த 2009 ம் ஆண்டு ஆண்டாள் என்ற யானை சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த யானையை பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவர் பராமரித்து வந்தார்.
ஏற்கனவே மதுரை கள்ளழகர் கோவிலில் மூன்று பேரை தாக்கி கொன்ற ஆண்டாள் யானை, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் கடந்த 2013 ம் ஆண்டு பத்மினி என்கிற பெண்ணை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், யானைக்கு வயது முதிர்ச்சி காரணமாகவும் பார்வை குறைபாடு காரணமாகவும் பூங்காவில் வைத்து பராமரிக்க முடியாததால் திருச்சியில் உள்ள யானைகள் முகாமிற்கு அனுப்ப மாவட்ட வனத்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கன மழை.. பெருக்கெடுத்து வரும் வெள்ளம்.. செங்கல்பட்டு மாவட்டத்தில் உஷார் நிலை.. வெள்ள எச்சரிக்கை
இந்த நிலையில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை யானையின் உடல் நலம் குறித்து பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். இதற்காக மருத்துவ பரிசோதனை செய்வதற்காக வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையில் மருத்துவர்கள் இன்று மாலை யானைக்கு பரிசோதனை செய்து கொண்டிருந்த போது மதம் பிடித்ததால், முதலில் யானை மருத்துவரை தாக்கியுள்ளது.
யானையை பராமரித்து வந்த பாகன் காளியப்பன் யானையை கட்டுப்படுத்தி சமாதான படுத்த முயற்சி செய்துள்ளார். ஆனால், பாகனை யானை மிதித்து கொன்றது. இதில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால் யானை ஆக்ரோஷமாக இருந்ததால் யானை இருந்த இடத்திலிருந்து உயிரிழந்த காளியப்பன் சடலத்தை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் வனத்துறை அலுவலர்கள் உதவியுடன், யானைக்கு மயக்க ஊசி செலுத்தி ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு காளியப்பன் உடலை மீட்டனர். தொடர்ந்து காளியப்பன் உடல் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் ஆண்டாள் யானை பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் உயிரியல் பூங்காவில் வைத்து இனி பராமரிக்க முடியாது எனவும், ஓரிரு நாட்களில் இந்த யானையை முகாமிற்கு அனுப்பப்படும் எனவும் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி தெரிவித்துள்ளார். எனவே, 65 வயதான ஆண்டாள் யானை தாக்கியதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.