17 வயது மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. சேலம் மத்திய சிறையில் தூக்கில் தொங்கிய அசோக்குமார்
சேலம்: சேலத்தில் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி மத்திய சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்..
ஜாமீன் கேட்டு நீதி மன்றத்தில் மனு செய்ததாகவும் ஆனால் ஜாமீன் கிடைக்காத நிலையில், அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். சேலத்தில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வந்தார் அசோக்குமார்.
ஜூன் மாதம் கைது
அசோக்குமார், 17 வயது பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
சிறையில் அடைப்பு
சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அசோக்குமார் மீது விசாரணை நடந்தது. விசாரணைக்கு பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 8 மாதங்களாக இவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
ஜாமீன் கிடைக்காத விரக்தி
அசோக்குமார் ஜாமீன் கேட்டு நீதி மன்றத்தின் மனு செய்திருக்கிறார். ஆனால் ஜாமீன் கிடைக்காத நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் சிறையிலேயே அசோக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஜாமீன் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
பிரேதம் அனுப்பிவைப்பு
அசோக்குமாரின் சடலத்தை மீட்ட சிறைத்துறை காவலர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்தும் அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.