மத்த தொகுதிகளை விடுங்க.. சேலம் ரொம்ப முக்கியம், ஜெயிச்சே ஆகணும்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு!
சேலத்தில் நேரடியாக அதிமுக - திமுக மோத உள்ளதால் பெருத்த விறுவிறுப்பு
Recommended Video
சென்னை: மத்த தொகுதியை விடுங்க.. சேலம் தொகுதியில் ஜெயிச்சே ஆக வேண்டிய கட்டாயம், நிர்ப்பந்தம், அவசியம், நெருக்கடி என எல்லாமே சேர்ந்து கொண்டுள்ளது முதல்வர் பழனிசாமிக்கு!
சேலம் தொகுதியில் திமுக-அதிமுக என இரண்டுமே நேருக்கு நேராக களமிறங்குகிறார்கள். இது ஒரு முக்கியமான தொகுதி. திமுக சார்பாக எஸ்.ஆர் பார்த்திபன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தேமுதிகவில் இருந்தவர்.
அக்கட்சியிலிருந்து அதிருப்தியால் வெளியேறி கருணாநிதி முன்பு திமுகவில் இணைந்தார். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை இவர் கட்சிக்கு காட்டிய விசுவாசம்தான் இன்றைக்கு திமுக தலைவர் சீட் தர காரணமாக அமைந்திருக்கிறது.
ஏன் ஒரு இஸ்லாமியருக்கு கூட போட்டியிட சீட் தரவில்லை திமுகவும், அதிமுகவும்?
பார்த்திபனுக்கு சீட்
சமீப காலம்வரை சேலம் என்றாலே திமுகவில் வீரபாண்டிய ஆறுமுகம்தான் நினைவுக்கு வரும். கருணாநிதியின் செல்லபிள்ளையாக இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு அவரது மகன் வீரபாண்டிய ராஜா பெயர் வலம் வர தொடங்கியது. ஆனால் தந்தை அளவுக்கு அவரால் சோபிக்க முடியவில்லை. இதனால்தானோ என்னவோ பார்த்திபனுக்கு சீட் தரப்பட்டுள்ளது.
ஒத்துழைப்பு?
மாற்று கட்சியில் இருந்து வந்த ஒருவருக்கு சீட் தந்துள்ளதால், ராஜா தரப்பு எந்த அளவுக்கு பார்த்திபனுக்கு ஒத்துழைப்பு தரும் என தெரியவில்லை. மற்றொரு பக்கம் அதிமுக-பாஜக கூட்டணி அதிருப்தி, மத்திய, மாநில அரசுகளால் மக்களின் அதிருப்தி போன்றவையும் பார்த்திபனுக்கு சாதமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
கட்டாயம்
அதேபோல, அதிமுக வேட்பாளர் சரவணன் களமிறங்கி உள்ளார். இந்த தொகுதி முதல்வரின் சொந்த தொகுதி. இங்கு சரவணன் ஜெயித்தே ஆக வேண்டும் என்பது முதல்வருக்கு கட்டாயமான ஒன்று. சொந்த தொகுதியிலேயே ஜெயிக்காவிட்டால் அது எத்தனையோ விமர்சனங்களை இழுத்து கொண்டு வந்துவிடும் என்பதை உணர்ந்துதான், இங்கு தீவிரமான வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
சரவணன்
தொகுதியில் முதல்வர் நிற்பதாகவே சரவணனுக்கு ஓட்டு போடும் நிலைமை உருவாகி உள்ளது. இதை தவிர ஆளும் தரப்பின் பண பலம், ஆள் பலம் என எல்லாமே களமிறக்கப்படும் போல இருக்கிறது. முதல்வரின் மறு உருவமாக சரவணனை பார்க்கும் அளவுக்கு "தாராளமான" சில வேலைகளும் கண்டிப்பாக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீரபாண்டி செல்வம்
இதற்கு நடுவில் அமமுக வேட்பாளராக களமிறங்கி இருப்பவர் வீரபாண்டி செல்வம். இவரது ஓட்டுக்கள் எல்லாமே திமுகவுக்கு லாபம். அதிமுக ஓட்டுக்களை பிரிப்பார். வெற்றி தோல்வியை நிர்ணயிக்ககூடிய வேட்பாளராக இருக்கிறார் செல்வம்.
புகைச்சல்தான்
இவர் யார் என்றால், அன்று எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் போட்டியிட்டபோது, வீரபாண்டி தொகுதியில் போட்டியிட்டவர். ஆனால் மிக மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் செல்வம் தோற்றார். அப்போது ஆரம்பித்த பகைதான்.. புகைச்சல்தான்.. இன்னும் இருவருக்குள்ளும் புகைந்து கொண்டிருக்கிறது.
பரபரப்பு சேலம்
ஜெயலலிதா மறைந்தவுடன், ஓபிஎஸ் அணிக்கு தாவிய இவர், பிறகு டிடிவி அணிக்கு சென்றுவிட்டார். இவரால்தான் எடப்பாடிக்கு டஃப் தர முடியும் என்று தினகரன் நம்புகிறாராம். ஆக தமிழக மக்களை விறுவிறுப்பு நிறைந்த சேலம் தொகுதி திரும்பி பார்க்க வைக்கும் போல தெரிகிறது!