'யாரோ சிலர் கட்சிக் கொடியைப் பயன்படுத்துவதால், அவர்கள் தலைவராகிவிட முடியாது.." ஜெயக்குமார் அட்டாக்
சேலம் : அதிமுக கூட்டணி அதே நிலையில் நீடிக்கிறது என்று தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் யார் வந்தாலும் அரவணைத்துக் கொண்டு செல்வோம் என்றும் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை இல்லத் திருமண விழாவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மேலும், பல அதிமுக தலைவர்களும், நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர்
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "அதிமுக பொதுக்குழு கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுக்குழு சர்வ வல்லமை படைத்ததாகும். ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இனி கிளைக் கழக தேர்தல் நடக்கும். ஜெயலலிதாதான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர். அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்
அதனால்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டு கட்சிப் பணிகள் நடக்கிறது. ஜெயலலிதா காலத்தில் எப்படி கட்சி நடந்ததோ அப்படிதான் கட்சி நடந்து வருகிறது. ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும். அதற்காகத் தான் தற்போது கிளைக் கழக தேர்தல் நடக்கிறது. ஒருங்கிணைப்பாளரும் , இணை ஒருங்கிணைப்பாளரும் சிறப்பாகக் கட்சியை வழி நடத்தி வருகிறார்கள்.
பிரதான எதிர்க்கட்சி நாங்கள் தான்
அதிமுக பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறது. ஜெயலலிதாவிற்குப் பிறகு கட்சி இருக்காது எனக் கூறினார்கள். ஆனால் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் இரட்டை இலை சின்னத்துடன் அதிமுக சிறப்பாகச் செயல்படுகிறது. சட்டசபைத் தேர்தலில் ஒரு கோடியே 44 லட்சம் வாக்குகள் வாங்கி இருக்கிறோம். தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிமுகவுக்கு ஆதரவு தருகிறார்கள். இதைத் தாங்க முடியாமல் சிலர் வேண்டும் என்று புரளி கிளப்பி விடுகிறார்கள்.
அதிமுகவுக்கு பாதிப்பு இல்லை
அதிமுகவில் எடுக்கப்படும் முடிவுகள் ஒருமித்த கருத்தோடு எடுக்கப்படுகிறது. இதனால் எந்த பிரச்சினையும் ஏற்படுவதில்லை. சில நேரங்களில் அடுத்தடுத்து விவாதங்கள் வரும். ஆனால் ஒருமித்த கருத்து எடுப்பதால் அதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். கட்சி எழுச்சியாக இருக்கிறது. வலிமையாக இருக்கிறது. பலம் வாய்ந்த சக்தியாக அதிமுக இருக்கிறது. யாரோ ஒருவர் கட்சியை விட்டுப் போகிறார் என்றால் அதனால் அதிமுகவிற்குப் பாதிப்பு இல்லை.
யாரோ சிலர்
உடலில் அதிமுக ரத்தம் ஓடுபவர்கள் எந்த காலத்திலும் அதிமுகவை விட்டுப் போக மாட்டார்கள். தொண்டர்களால் உருவான கட்சி அதிமுக. அதிமுகவின் சொத்து தொண்டர்களும், பொதுமக்களும் தான். தொண்டர்களும், பொதுமக்களும் இருப்பதால் அதிமுகவை அசைக்க முடியாது. யாரோ சிலர் கட்சிக் கொடியைப் பயன்படுத்துகிறார்கள் பொதுச்செயலாளர் பெயரைப் பயன்படுத்துகிறார்கள் என்றால் அவர்கள் தலைவராகிவிட முடியாது" என்றார்.
கட்சி கூட்டணி
மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "அதிமுக கூட்டணி அதே நிலையில் நீடிக்கிறது. யார் வந்தாலும் அரவணைத்துக் கொண்டு செல்வோம். கூட்டணிக்கு வருவதும்., வராததும் அவர்களுடைய விருப்பம்" என ஜெயக்குமார் கூறினார்