சாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக – எடப்பாடி பழனிசாமி உறுதி
சேலம்: இந்திய அளவில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்திய ஒரே இயக்கம் அதிமுகதான் என்றும், திமுகவை கண்டித்து நேற்று நடைபெற்ற ஆர்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி கொடுத்ததற்கும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்ரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுக அமைப்பு தேர்தல் இரண்டாம் கட்டமாக 36 மாவட்டங்களில், இம்மாதம் 22 மற்றும் 23 தேதிகளில் நடைபெறுகிறது. கோவை கழக மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலுக்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கோவை மாநகர் மாவட்டத்திற்கு அமைப்பு செயலாளர் செம்மலை, மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் மணி, சுந்தர்ராஜன், சித்ரா ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு சேலம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெய்சங்கரன், நல்லதம்பி, ராஜமுத்து ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக ஆலோசனைக் கூட்டம்
இந்த தேர்தலில் ஆணையாளர்களாக கலந்துகொள்ள உள்ள தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

திமுகவுக்கான போராட்டம் வெற்றி
நிகழ்ச்சியில் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெறும் கழக அமைப்பு தேர்தலை முதன்முதலில் நடத்தி முடித்தது சேலம் புறநகர் மாவட்ட கழகம்தான் என்றும், அதற்காக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக பேசினார். திமுகவை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி கொடுத்ததற்கும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், அதிமுக நடத்திய இந்த ஆர்பாட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றும், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே இயக்கம் அதிமுக என்பதை நிரூபித்து காட்டியுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிமுக மக்களுக்கான கட்சி
அடித்தட்டு மக்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும்தான் எம்ஜிஆர் இந்த கட்சியை உருவாக்கினார் எனவும், அவரது வழியில் பல்வேறு சிரமங்களுக்கும் இடையில் தனது உயிர் இருக்கும்வரை அதிமுகவை வழிநடத்தியவர் ஜெயலலிதா என்றும் குறிப்பிட்ட அவர், தனக்கு பின்னும் அதிமுக 100 ஆண்டுகள் வாழும் என்று தெரிவித்தவர் ஜெயலலிதா என்றார்.

சாதி மதத்திர்கு அப்பாற்பட்ட கட்சி
அதிமுக ஜனநாயக கட்சி என்றும் சாதி, மதத்திற்கு அப்பார்பட்ட கட்சி என்றும் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, இந்திய அளவில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் ஜனநாயக முறைப்படி உட்கட்சி தேர்தல் நடத்தியது அதிமுகதான் என்றார். சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல் போல் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, ஒன்னரை கோடி தொண்டர்களின் உறுப்பினர் பட்டியல் வெளியிட்டுள்ளோம் என்று கூறியதுடன், இரண்டாம் கட்ட தேர்தலை விறுப்பு வெறுப்புகளுக்கு அப்பார்பட்டு நேர்மையான முறையில் நடத்திக் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.