அதிமுக எம்எல்ஏக்கள் மருதமுத்து, சின்னத்தம்பிக்கு கொரோனா தொற்று உறுதி - மருத்துவமனையில் சிகிச்சை
கெங்கவல்லி அதிமுக எம்எல்ஏ மருதமுத்துவுக்கும், ஆத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சின்னத்தம்பி கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சேலம்: சேலம்மாவட்டம் ஆத்தூர் தொகுதி எம்எல்ஏ சின்னத்தம்பிக்கும், கெங்கவல்லி தொகுதி எம்எல்ஏ மருதமுத்துவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையில் குணமடைந்து 8 லட்சம் பேர் வரை வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் கடந்த 43 நாட்களாக கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் கீழாகவே உள்ளது.
கொரோனா தொற்றுக்கு பொதுமக்கள் மட்டுமல்லாது எம்எல்ஏக்கள், அமைச்சர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சின்னத்தம்பிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து சின்னத்தம்பி எம்எல்ஏ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண உதவிகளை வழங்கி வந்துள்ளார். எம்எல்ஏஉடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதி அதிமுக எம்எல்ஏ மருதமுத்துவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடல் சோர்வாக இருந்த நிலையில் பரிசோதனை செய்த போது கொரோனா உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் அவர் ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.