மகளிர் வாக்குகளை குறிவைக்கும் முதல்வர்... இல்லத்தரசிகளுக்கு அதிரடி அறிவிப்புகள்
மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் ஓடோடி வரக்கூடிய பழனிசாமி ஆக இருப்பேன் என்று மகளிரணி கூட்டத்தில் பேசிய முதல்வர் தெரிவித்துள்ளார். நீங்கள் ஆணையிட்டால் அதை செய்யக்கூடிய முதல்வராக இருப்பேன் என்றும் அவர் பேசியுள்ளார்.
சேலம்: சட்டசபைத் தேர்தல் வருவதற்கு முன்பாகவே பல திட்டங்களையும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிகளையும் அறிவித்து வரும் முதல்வர் பழனிச்சாமி, பெண்களை குறிவைத்து மிக முக்கிய திட்டத்தை அறிவிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னோட்டமாகவே பூத் கமிட்டி கூட்டத்தில் பேசியுள்ள முதல்வர் மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் ஓடோடி வரக்கூடிய பழனிசாமி ஆக இருப்பேன் என்று நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஆளும்கட்சியான அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்ற முழு முனைப்போடு செயல்பட்டு வருகிறது மாவட்டந்தோறும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் அதிமுக மகளிர் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவிகித பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் ஜெயலலிதா என புகழாரம் சூட்டினார்.
சகோதரரை பார்க்க கூடியிருப்பது போல கூடியுள்ளீர்கள். இந்த கூட்டத்தை பார்க்கும் போதே மனம் மகிழ்ச்சியாக உள்ளது, தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு மகளிரின் பங்கு முக்கியமானது என்றார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிச்சாமி ஜெயலலிதா அறிவித்தபடி கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவித்தொகை 18 ஆயிரம் ரூபாயாக அதிகரித்தது அதிமுக அரசு என்றும், இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 25 லட்சம் தாய்மார்கள் பயன் பெற்றுள்ளனர் எனவும் தெரிவிரித்தார். ஏழை என்ற சொல்லை தமிழகத்தில் இருந்து நீக்குவதே எனது லட்சியம் என்றும் கூறினார்.
புதுச்சேரியில் பாஜக செய்வது ஒத்திகை.. அடுத்து தமிழகம்தான்.. திருமாவளவன் சொல்வதை பாருங்க
கொரோனா காலத்தில் மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அளித்தது. தொழிலதிபர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் அ.தி.மு.க.ரூ.82,000 கோடி கடன் உதவி வழங்கியுள்ளோம்.பெண்கள் எதையும் சாதிக்கும் திறமை படைத்தவர்கள் என்றும் கூறினார்.
திமுகவினர் செய்யும் அராஜகங்களுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் ஸ்டாலின். இத்தகையை தலைவர் தேவையா?திமுக ஆட்சியில் இருந்தபோது பெண்களின் சுமை குறித்து யோசித்தது உண்டா? பெண்களுக்கென சிறப்பு திட்டங்கள் கொடுக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினார்.
மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் ஓடோடி வரக்கூடிய பழனிசாமி ஆக இருப்பேன். நீங்கள் ஆணையிட்டால் அதை செய்யக்கூடிய முதல்வராக இருப்பேன். திமுகவின் தில்லுமுல்லுகளை தகர்த்தெறிந்து அதிமுக வெற்றி பெற மகளிர் பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு, விவசாயிகளுக்கு அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் முதல்வர் பழனிச்சாமி விரைவில் மகளிரின் வாக்குகளை கவரும் வகையில் மிக முக்கியமான அறிவிப்பினை வெளியிடுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அந்த அறிவிப்பினை முதல்வர் பழனிச்சாமி வெளியிடப்போவதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.