வரலாறு காணாத வெற்றி.. சசிகலா இதை விரும்புவாராம்.. முதல்வரை சந்தித்து வாழ்த்து சொன்னது யார் தெரியுமா?
Recommended Video
சேலம்: ஜெயலலிதா இருந்திருந்தால் எவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்குமோ அந்த அளவுக்கான வெற்றி இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்துள்ளது என்ற ஒரு கருத்தை தெரிவித்துள்ளார், புகழேந்தி. ஆம்.. அமமுக செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டிருந்தாரே அதே பெங்களூர் புகழேந்திதான்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என கட்சி தொடங்கினார் டிடிவி தினகரன். அப்போது, தங்கத்தமிழ்ச் செல்வன், பெரம்பூர் வெற்றிவேல் போன்ற முக்கியஸ்தர்களுடன், பெங்களூரு புகழேந்தியும் முக்கிய புள்ளியாக அந்த கட்சியில் விளங்கினார்.
புகழேந்தி ஏற்கனவே ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக இருந்தபோது, கர்நாடக மாநில அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டவர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அவர் தினகரனுடன் சேர்ந்தார். தீவிர சசிகலா விசுவாசியாக அறியப்படுபவர்.
பல தலைவர்கள் விலகல்
இந்த நிலையில் டிடிவி தினகரன் அணியிலிருந்து பல முன்னணி தலைவர்களும் வெளியேறத் தொடங்கினர். தங்கத் தமிழ்ச் செல்வன் தற்போது திமுகவில் இணைந்து, கொள்கைப் பரப்பு செயலாளர் பதவியையும் பெற்றுள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் கோவையில், புகழேந்தி, அமமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சிலரை சந்தித்து பேச, அதை அமமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சமூக ஊடகங்களில் வெளியிட்டது.
எடப்பாடி பழனிச்சாமியுடன் மீட்டிங்
இந்த வீடியோ வெளியானதற்கு புகழேந்தி அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், சேலத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து புகழேந்தி பேசியுள்ளார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்த்து
முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் புகழேந்தி. அப்போது அவர் கூறியதாவது: நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய, இரண்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு முதல்வரை சந்தித்து, வாழ்த்துக்கள் தெரிவிக்க வந்துள்ளேன். வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டேன். உண்மையிலும் நெஞ்சார்ந்த இதயபூர்வமாக எனது வாழ்த்துக்களை முதல்வருக்கு தெரிவித்தேன்.
ஜெயலலிதா வெற்றி
ஜெயலலிதாவிற்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் பணியாற்றினேன். அப்பொழுது 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்டோம். இதே போன்று இரண்டு தேர்தல்களிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெற்றுள்ளது. ஜெயலலிதா இருந்தால் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோமோ அதே அளவு, விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
மாபெரும் வெற்றியை முதலமைச்சர் பெற்றுக் கொடுத்துள்ளார்.
வரலாறு காணாத அளவுக்கு வெற்றி
இப்பொழுது அதிமுகவில் சேர வரவில்லை. வாழ்த்து சொல்ல வந்தேன். அதிமுகவில் சேர்வதாக இருந்தால் உங்களிடத்தில் கூறிவிட்டுத்தான் சேர்வேன். இந்த ஆட்சி ஜெயலலிதா ஆட்சி. எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி. வரலாறு காணாத அளவு வெற்றியை முதலமைச்சர் பெற்றுக் கொடுத்துள்ளார். இதைத்தான் சசிகலா விரும்புவார். இவ்வாறு புகழேந்தி தெரிவித்தார்.