காரில் வந்த டுபாக்கூர் போலீஸ் அதிகாரி.. அமமுகவின் முன்னாள் நிர்வாகி சேலத்தில் அதிரடி கைது
சேலம்: சேலத்தில் போலீஸ்காரர் வேடத்தில், வழிப்பறியில் ஈடுபட்ட அமமுக கட்சியின் முன்னாள் நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் கன்னங்குறிச்சி போலீசார், சின்னத்திருப்பதி முதன்மைச் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஒரு சொகுசு கார் வந்தது.
அதனை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். காருக்குள், போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தும் 4 தொப்பிகள், 2 லத்திகள் ஆகியவை இருந்தன. காரை ஓட்டி வந்த நபரிடம் இதை பற்றி விசாரித்தபோது, அவர் அஸ்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த அமமுக பிரமுகர், பெயர் ஜெகதீஸ்வரன் 30 என்பது தெரியவந்தது.
மேலும் இவ்வளவு காலம், தன்னை போலீஸ் அதிகாரி எனக்கூறி பலரிடம் மிரட்டிப் பணம் பறித்து வந்திருப்பதையும் போலீசார் விசாரணையில் அறிந்தனர்.
ரஜினிகாந்துக்கு திரைப்படத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது.. மத்திய அரசு அறிவிப்பு
இதையடுத்து ஜெகதீஸ்வரனை கைது செய்ததுடன், அவரிடமிருந்த சொகுசு கார், காரில் இருந்த தொப்பிகள், லத்திகளையும் பறிமுதல் செய்தனர். ஜெகதீஸ்வரன், அமமுகவில் சேலம் மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்தவராம். இவர் மீது ஏற்கனவே வழிப்பறி, அடிதடி என பல வழக்குகளும் உள்ளதாம்.
இந்த விவகாரம் தெரிந்ததுமே அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனாலும் அதற்குபிறகு போலீஸ் அதிகாரி எனக்கூறிக்கொண்டு பலரிடம் பணம் பறித்து வந்திருக்கிறார். இதுபோக கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இப்போது, போலீசார் ஜெகதீஸ்வரனை சேலம் ஜெயிலில் அடைத்துள்ளனர்.