தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வர வேண்டும்... அதிமுகவை கதறவிடும் அன்புமணி ராமதாஸ்
சேலம்: தமிழகத்தில் இளைஞர்கள் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியிருப்பது அதிமுக தலைவர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்துகொண்டே ஆட்சியை அகற்றி ஆட்சி மாற்றம் வேண்டும் என அன்புமணி எவ்வாறு பேசலாம் என்றும், முதல்வர் ஏன் வேடிக்கை பார்க்கிறார் எனவும் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே வேறு கட்சி ஆட்சி நடத்த தாங்கள் கட்சி நடத்தவில்லை என்றும், ஆட்சியை பிடிக்கத்தான் தாங்களும் கட்சி நடத்துவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
என்னாச்சு.. என்ன நடக்கிறது.. முதல்வரை திடீரென சந்தித்த பாரிவேந்தர்.. ஆனால் மேட்டர் வேறயாம்!
இணக்கம்
அதிமுக கூட்டணியில் வேறு எந்த கட்சிக்கு கிடைக்காத மரியாதை பாட்டாளி மக்கள் கட்சிக்கு தரப்பட்டு வருகிறது. காரணம் அந்தக் கட்சிக்கு வடமாவட்டங்களில் உள்ள செல்வாக்கும், வாக்குவங்கியும் தான். மேலும், இன்று அதிமுக ஆட்சியில் நீடிக்கிறது என்றால் அதற்கு காரணம் பாமக. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளில் கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக 9 இடங்களை பிடித்து ஆட்சிக்கு தேவையான மெஜாரிட்டியை பெற்றது. குறிப்பாக வட தமிழகத்தில் பாமக கூட்டணி அதிமுகவும் கை கொடுத்து உதவியது.
ஆலோசனை
இதனால் அந்த நன்றிக்கடனுக்காக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும் ஆலோசனைகளையும், கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார். மேலும், தேமுதிக, பாஜக கட்சிகளை விட பாமகவுக்கு அதிக முன்னுரிமையும் அளித்து வருகிறார் இ.பி.எஸ். இப்படிப்பட்ட சூழலில், அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கில் தமிழகத்தில் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என அன்புமணி பேசியது, இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிட்டது.
பாமக ஆட்சி
மேலும், தமிழகத்தில் பாமக ஆட்சிக்கு வந்தால் தான் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றும், ஒரு பைசா செலவில்லாமல் உயர்கல்வி வரை படிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அன்புமணி கூறியுள்ளார். இதேபோல் செலவின்றி தரமான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க தன்னிடம் பல நல்ல திட்டங்கள் உள்ளதாகவும் அன்புமணி கூறி வருகிறார். இலவச கல்வி, செலவின்றி மருத்துவம் ஆகிய இரு முழக்கங்களும் இளைஞர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் கட்டணம் கட்ட முடியாமல் சிரமப்படும் நிலையில் அன்புமணியின் உறுதி இளைஞர்களை கவரும் வகையில் உள்ளது.
துணிச்சல்
அதிமுக கூட்டணியில் இருந்தாலும் பாட்டாளி மக்கள் கட்சியை விட்டுத்தராத வகையில் அன்புமணியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. தமிழகத்தில் நேற்று கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் ஆட்சியை பிடிப்போம் எனக் கூறும் போது 30 ஆண்டுகளாக கட்சி நடத்தும் தாங்கள் ஆட்சியை பிடிக்க வேண்டும் என பேசுவதில் என்ன தவறு இருக்கிறது என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வேறு கட்சி ஆட்சி நடத்த தாங்கள் கட்சி நடத்தவில்லை என்றும், ஆட்சியை பிடிக்கத்தான் தாங்களும் கட்சி நடத்துவதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.