காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் சரமாரி துப்பாக்கி சூடு.. தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மதியழகன் வீர மரணம்
சேலம்: இந்தியா பாகிஸ்தான் எல்லையான ஜம்முவில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் சேலம் மாவட்டம் எடப்பாடி சேர்ந்த மதியழகன் என்பவர் உயிரிழந்தார். அவரின் உடல் சொந்த ஊரான சித்தூருக்கு நாளை கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ள நிலையில் பாகிஸ்தான் அவ்வப்பொழுது எல்லை தாண்டி பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக நமது இந்திய ராணுவமும் எல்லையில் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருந்து வருகிறது.
இதற்கிடையில் நேற்று மாலை முதல் இரவு வரை இந்தியா பாகிஸ்தான் எல்லையான ஜம்மு காஷ்மீர் சுந்தரபாணியில் இரண்டு நாட்டு ராணுவத்திற்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில் சேலம் மாவட்டம் எடப்பாடிக்குட்பட்ட சித்தூர் ஊராட்சி வெத்தலைகாரன் காடு பகுதியை சேர்ந்தவர் மதியழகன்(40) குண்டு பாய்ந்து உயிர் இழந்து உள்ளார்.
செம ட்விஸ்ட்.. கறுப்பின போராட்டத்துக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த அதிபரின் மகள்.. ஷாக் ஆன டிரம்ப்!!
கடந்த 1999 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து அவுஸ்தார் பதவியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தமிழரசி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் குண்டு பாய்ந்து மதியழகன் இறந்துவிட்டதாக நேற்று இரவு 9 மணி அளவில் அவரது மனைவி தமிழரசிக்கு ராணுவ அதிகாரிகள் தகவலை தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் அறிந்த மதியழகனின் குடும்பத்தார் மற்றும் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் குண்டு பாய்ந்து உயிரிழந்த ராணுவ வீரர் மதியழகன் உடல் நாளை காலை சொந்த கிராமமான எடப்பாடி சித்தூருக்கு எடுத்து வரப்படும் என தகவல் வெளியாகி வருகிறது. ராணுவ வீரர் உயிரிழந்த செய்தி அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.