காஞ்சிபுரத்தில் பக்தர் கூட்டம்.. சேலத்திலும் எழுந்தருளிய அத்தி வரதர்.. பக்தர்கள் பரவசம்
சேலம்: காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் தரிசனம் நிறைவடைந்துள்ள நிலையில், சேலத்தில் அத்தி வரதரை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுக்கு ஒருமுறை திருக்குளத்தில் இருந்து வெளியே வந்து அத்திவரதர் அருள்பாலிப்பது வழக்கம். அத்திவரதர் பக்தர்களுக்கான தரிசனம் நேற்று, நிறைவு பெற்றுள்ள நிலையில், லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள அத்தி வரதர் தரிசனம் செய்தனர்.
இருப்பினும் பெரும்பாலோனோர் அத்தி வரதரை தரிசிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் சேலம் பட்டைகோயில் பகுதியில் உள்ள வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் அத்திவரதர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அத்திவரதரை தரிசனம் செய்தது 1 கோடி பக்தர்கள்.. காணிக்கை 7 கோடிதானா?
தரிசனம்
இந்த அத்திவரதரை காண்பதற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். காஞ்சிபுரத்தில் இன்று அத்தி வரதர் மீண்டும் குளத்திற்குள் சயனம் செய்ய சென்றதை போலவே, இந்த பெருமாள் கோவில் அத்திவரதரும் இன்றுடன் 48வது நாள் தரிசனத்தை நிறைவு செய்கிறார்.
சிறப்பு அலங்காரம்
கடந்த 48 நாட்கள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு நாள்தோறும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பட்டகோயில் பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேசர் திருக்கோயிலில் அத்தி மரத்தால் ஆன அத்திவரதர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. தலைக்காப்பு, வாசனை மலர்கள் அலங்காரம் செய்து, ஆராதனை செய்யப்பட்டு காஞ்சிபுரம் அத்தி வரதர் சுவாமிக்கு செய்யப்படும் அனைத்து சேவைகளும் இந்த அத்திவரதருக்கு, தினந்தோறும் தீபாராதனை செய்யப்பட்டு வருகிறது.
அத்தி மரம்
இந்த அத்தி வரதர் சுவாமி சிலையானது, ஏற்காட்டில் உள்ள பழமையான அத்தி மரங்களைத் தேர்வு செய்யப்பட்டு மர சிற்ப கலைஞர்களை கொண்டு ஆறடி உயரத்தில் அச்சு அசலாக காஞ்சிபுரத்தில் உள்ள அத்தி வரதரை போலவே தயார் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
பக்தர்கள் பரவசம்
இந்த அத்தி வரதருக்கு, நாள்தோறும் முத்தங்கி அலங்காரம், தங்கம் வெள்ளி ரத அலங்காரம் என பல்வேறு அலங்காரம் செய்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று 48வது நாள் என்பதால் அத்தி வரதரை தரிசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும், குறிப்பாக ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதியிலிருந்தும் பக்தர்கள் நீண்ட தூரம் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து அத்தி வரதர் தரிசனம் செய்தனர்.