"அந்த" சத்தம்தான் உதவியது.. சேலம் ரயில் கொள்ளையில் 2 பேர் கைது.. பரபரப்பு வாக்குமூலம்
சேலம் ரயிலில் கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: ரயிலின் கூரையில் பெரிய சைஸ் ஓட்டையை போட்டு ரூபாய் பழைய நோட்டுக்களை இப்படித்தான் கொள்ளை அடித்தோம் என்று இந்த வழக்கில் கைதான 2 பேர் வாக்குமூலம் தந்திருக்கிறார்கள்.
ரயில் ஓட்டை போட்டு, ரூபாய் பழைய நோட்டுக்கள் 228 பெட்டிகளில் எடுத்து வரப்பட்டது. அந்த பணத்தின் மதிப்பு ரூ.5.75 கோடி என கூறப்பட்டது. தொகையோ பெரியது... பெட்டிகளோ நிறைய... இடமோ பரபரப்பான 'எக்மார் ரயில்வே ஸ்டேஷன்'... இந்த கொள்ளை எப்படி, எப்போது, யாரால், எங்கே தொடங்கி நடைபெற்றது என்பதை யோசித்து முடிக்கவே போலீசார் ரொம்பவே திணறிவிட்டனர். சிபிசிஐடி போலீசார் இதனை கையிலெடுத்தனர்.
நாசாவின் உதவி
ரயில்வே ஸ்டேஷனில் இருந்த காமிரா முதற்கொண்டு, வந்தவர், போனவர், பார்சல் ஊழியர்கள், பெட்டி தூக்கும் போர்ட்டர்கள் வரை விசாரித்துவிட்டார்கள். எதுவுமே பிடிபடவில்லை. இதற்கு நாசா உதவியது. சேலத்தில் இருந்து எழும்பூர் அந்த வந்த ரயிலின் 350 கி.மீ.தூரத்தை செயற்கை கோள் மூலம் புகைப்படங்களை அனுப்பி வைத்து சிபிசிஐடி-க்கு தோள் கொடுத்தது.
[ காலம் கலி காலம் ஆகி போச்சுடா.. பொது இடத்தில் நெருக்கம்.. பதை பதைக்க வைக்கும் மாணவ ஜோடி! ]
வாக்குமூலம்
அதனால் 2 வருடம் கழித்து இப்போது இந்த கொள்ளையில் இறங்கியவர்கள் யார் என்பது தெரிந்துவிட்டதாக சென்ற மாதம் கூறப்பட்டது. அதனடிப்படையில் போலீசார் தற்போது மத்திய பிரதேசத்தை சேர்ந்த தினேஷ், ரோஹன் பார்த்தி ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை எப்படி நடந்தது என்று தெரிவித்துள்ளார்கள்.
வேவு பார்த்தோம்
இந்த கொள்ளையை அரங்கேற்ற நாங்க ரொம்ப நாளாகவே திட்டம் போட்டோம். சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலையும் அந்த ஸ்டேஷன்களையும் தொடர்ந்து நோட்டம் போட்டோம். எப்போது ரயில் கிளம்புகிறது, எவ்வளவு நேரம் நிற்கிறது, பெரிய பெரிய பார்சல்கள் வந்தால் சரக்கு போக்குவரத்து அதிகாரிகள் எப்படியெல்லாம் கையாளுகிறார்கள் என்பதை வேவு பார்த்தோம். சந்தேகம் வந்துடக்கூடாது என்று பிளாட்பாரத்தில் டீ குடித்து கொண்டு, பேப்பர் படித்து கொண்டே இது எல்லாத்தையும் நோட்டம் பார்த்தோம்.
மேற்கூரை சென்றோம்
அதன்படி 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந்தேதி கோடிக்கணக்கான பணம் ரிசர்வ் வங்கிக்கு எடுத்து செல்லப்படுவதை அறிந்தோம். எங்கள் தலைவன் மோஹர்சிங் உட்பட 5 பேர் அந்த ரெயிலில் ஏறிக்கொண்டோம். நாங்கள் திட்டமிட்ட நேரத்தில் ரெயிலின் ஜன்னல் கம்பிகளை பிடித்து மெதுவாக ரெயிலின் மேற்கூரைக்கு ஒவ்வொருவராக சென்றோம்.
என்ஜின் சத்தம்தான்
நைட் டைம் வேறு. அதுவும் இல்லாமல், சுரங்கப்பாதை, மரக்கிளைகள், எதுவுமே இல்லாமல் ரெயிலின் மேற்கூரை பயணிக்க எளிதாகவே இருந்தது. 5 பேரும் பணம் இருந்த பெட்டியின் மேற்கூரையில் கூட்டாக அமர்ந்திருந்தோம். ரயில் விருத்தாச்சலம் நோக்கி சென்றது. அப்போது தான் நாங்கள் திட்டமிட்டிருந்த படி மேற்கூரையில் துளை போட்டோம். எங்களுக்கு அப்போது ரொம்ப உதவியாக இருந்தது ரெயில் என்ஜின் ஒலி எழுப்பும் சத்தம்தான். அந்த சத்தத்தை குறிவைத்துதான் துளை போட்டோம்.
விருத்தாச்சலத்தில் கூட்டாளி
2 பேர் அந்த துளையின்வழியாக ரெயில் பெட்டிக்குள் இறங்கி மரப்பெட்டிகளை உடைத்தார்கள். பணக்கட்டுகளை லுங்கியில் சுற்றி வைத்து கொண்டு, மேலேறி விட்டனர். நாங்களும் முன்பு போலவே ஜன்னல் கம்பிகள் வழியாக மெதுவாக கீழே இறங்கி, ரெயில் பெட்டிக்குள் வந்துவிட்டோம். விருத்தாசலத்தில் ரயில் நின்றபோது, அங்கே தயாராக இருந்த எங்கள் கூட்டாளியிடம் பணத்தை கொடுத்து எஸ்கேப் ஆகிவிட்டோம்.
செலவு செய்தோம்
பக்காவாக பிளான் பண்ணியதை நினைத்தும், கோடி கோடியான பணத்தை பார்த்ததும் எங்களுக்கு சந்தோஷம் தாங்க முடியல. ஆனா எல்லாமே பழைய ரூபாய் நோட்டு என்பது எங்களுக்கு தெரியாது. விஷயம் தெரிந்தபிறகு ரொம்ப அப்செட் ஆயிட்டோம். பழைய ரூபாயை மாற்றும் வசதி இருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினோம்.. இஷ்டத்துக்கு செலவும் செய்தோம்.
ஏமாந்து சிக்கி கொண்டோம்
அதுக்கு பிறகுதான் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு வந்ததும் எங்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. பணத்தை கொள்ளை அடித்ததிலிருந்து நிம்மதியே இல்லாமல்தான் இருந்தோம். போலீசார் எங்களை பிடிக்கவே மாட்டார்கள் என்று நம்பி இருந்தோம். ஆனால் அதிலும் நாங்கள் ஏமாந்து சிக்கி விட்டோம்". இவ்வாறு இருவரும் கூறினார்கள்.