சிறையில் அடைக்கப்பட்ட பாஜக கேபி ராமலிங்கம்.. துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டரா? பரபரத்த சேலம்
சேலம்: தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாரதமாதா கோவிலில் பூட்டை உடைத்து மாலை அணிவித்ததாக கூறி பாஜகவின் துணை தலைவர் கேபி ராமலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.
Recommended Video
உடல் நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரை இன்று போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தான் அவர் வலியால் துடித்த நிலையில் போலீசார் வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாரத மாதா நினைவிட பூட்டு உடைப்பு வழக்கு - பாஜக பிரமுகர் கேபி ராமலிங்கம் சேலம் சிறையில் அடைப்பு!
பாரதமாத நினைவாலயம்
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவு மணி மண்டப வளாகத்தில் பாரத மாதா நினைவாலயம் உள்ளது. கடந்த வியாழக்கிழமை பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவிக்க சென்றனர். அப்போது நினைவாலயம் பூட்டு போடப்பட்டிருந்து. இதையடுத்து பூட்டை உடைத்து பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
துணை தலைவர் கைது
இதுதொடர்பாக நினைவு மண்டப காப்பாளர் சரவணன் பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம், தருமபுரி மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கத்தை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள அவரது வீட்டில், கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசார் கைது செய்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக கூறியதால் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இ.சி.ஜி., மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, மருத்துவக் குழுவினர் கே.பி.ராமலிங்கத்திற்கு சிகிச்சை அளித்தனர். பென்னாகரம் மாஜிஸ்திரேட் எம் பிரவீனா சேலம் அரசு மருத்துவமனைக்கு திங்கட்கிழமை வந்து சிகிச்சைகள் குறித்து விசாரித்தார். மேலும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
துன்புறுத்தி சிறையில் அடைப்பா?
இருப்பினும் அவருக்கு தொடர்ந்து உடல் நலக்குறைவு இருந்ததால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று கேபி ராமலிங்கத்தை போலீஸார் மருத்துவமனையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தான் கேபி ராமலிங்கம் வலியால் துடித்த நிலையில் துன்புறுத்தலுக்கு மத்தியில் அவரை போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் இருந்து சிறையில் அடைத்துள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
அண்ணாமலை கண்டனம்
இதுபற்றி பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ‛‛மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த பாஜகவின் மாநில துணை தலைவர் கேபி ராமலிங்கத்தை காவல் துறையினர் துன்புறுத்தி கைது செய்துள்ளனர். அவர் செய்த தவறு என்ன? பாரதமாதா சிலைக்கு மாலை அணிவித்த ஒரு குற்றமா? பாரதமாதா சிலைக்கு மாலை அணிவிப்பதை குற்றம் என்று இந்த அரசு சொல்லுமேயானால் அதை மீண்டும் செய்ய நாங்கள் அஞ்சமாட்டோம். குடும்ப ஆட்சியின் அடுத்த பரிமாணமே சர்வாதிகாரம். உங்களது அடக்கு முறைகளால் எங்களை மிரட்டலாம். எங்களை துன்புறுத்தலாம். உங்கள் அடக்கு முறையை மக்களும் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் சர்வாதிகாரி ஸ்டாலின். உங்களை சிம்மாசனத்தில் இருந்து இறக்கும் வரை மக்களின் குரலாக எங்கள் குரல் ஓங்கி ஒலிக்கும்'' என கூறியுள்ளார்.