எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளரா? பாஜக தேசிய தலைமையே முடிவு செய்யும்.. எல் முருகன் பேட்டி
சேலம் : சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி தொடரும் என்று கூறிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பது குறித்து பாஜக தேசிய தலைமை முடிவு செய்து அறிவிக்கும் என்றார்.
சேலத்தில் நேற்று பாஜ மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமை வகித்தார். தேசிய செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.
பின்னர் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில். தமிழகம் முழுவதும் இன்று (16ம் தேதி) முதல் 21ம் தேதி வரை ஆயிரம் சிறப்பு கூட்டங்களை நடத்தி, மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களின் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க போகிறோம்.
விளக்கக் கூட்டங்கள்
தமிழகத்தில் நடைபெற உள்ள வேளாண் சட்டங்கள் விளக்க கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஏற்படுத்தப்பட்ட கூட்டணியே, சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு எங்கள் கட்சியின் தேசிய தலைவர்கள் அறிவிப்பார்கள்.
எடப்பாடி பழனிசாமி
2016 தேர்தலில், பாஜக தனியாக நின்றது. 35 தொகுதிகளில் பாஜ 2 மற்றும் 3ம் இடம் வந்தது. 90 தொகுதிகளில் யார் வெற்றி பெறுவது என்பதையும் தீர்மானித்தது. இதை கருத்தில் கொண்டு, எங்களுக்கான தொகுதிகளை தேர்தல் நேரத்தில் கேட்போம். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பது குறித்து, பாஜ தேசிய தலைமை முடிவு செய்து அறிவிக்கும்" என்றார்.
அதிமுக கூட்டணி
ஏற்கனவே அளித்த பேட்டிகளிலும் எல் முருகன், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பது குறித்து, பாஜ தேசிய தலைமை முடிவு செய்து அறிவிக்கும் என்று தான் கூறினார். அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்பதை இந்த முறை உறுதி செய்துள்ளார்.
பாஜக உடன் இணைவாரா
சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியை பாஜக உறுதி செய்துள்ள நிலையில், இந்த கூட்டணியில் ரஜினியை இழுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. புது கட்சி தொடங்கும் ரஜினி அதிமுக கூட்டணியில் இணைவாரா? அல்லது கமலுடன் கை கோர்ப்பாரா அல்லது தனித்து களம் காண்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.