போராடும் சேலம் உருக்காலை தொழிலாளர்களை சந்தித்த பின் வானதி சீனிவாசன் பரபரப்பு பேட்டி
Recommended Video
சேலம்: சேலம் உருக்காலையை லாபகரமாக இயக்குவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தமிழக பாஜக பொது செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனமான சேலம் இரும்பு உருக்காலையை மத்திய அரசு தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி உருக்காலை தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் 35 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களை இன்று பாஜக தமிழக பொதுசெயலாளர் வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன், "சேலம் உருக்காலை குறித்து மத்திய எக்கு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து வலியுறுத்தினோம் அப்போது அவர், சேலம் உருக்காலையை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் மூலப்பொருட்கள் விலையை குறைத்து நட்டத்தை குறைக்கவும், விற்பனை பிரிவை தனியாக பிரிக்கவும் நடவடிக்கை எடுப்பதுடன், தொழிலாளர்களுக்கு எக்காரணத்தை கொண்டும் வேலை இழப்பு ஏற்படாது என்று உறுதியளித்துள்ளார்.
உருக்காலை நிர்வாகத்தில் ஊழல் நடந்துள்ளதாக தொழிற்சங்கம் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரத்துடன் தந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். ஆலை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம். தமிழக தொழில்துறை அமைச்சரிடம் உருக்காலை பங்குகளை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வலியுறுத்தியுள்ளோம். கேந்திரிய வித்யாலயா பள்ளி கேள்வித்தாள் பிரச்சினை குறித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது" இவ்வாறு கூறினார்.