பார்த்தாலே மனசு வலிக்குது.. உடைப்பெடுத் குடிநீர் குழாய்.. ஆயிரக்கணக்கான லிட்டர் நீர் வீண்!
சேலம்: சேலம் மாநகராட்சி நான்கு ரோடு அருகே சத்திரம் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் ஓடியதால் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் புகார் கொடுத்து 9 மணி நேரம் கழித்து அதிகாரிகள் சரி செய்தனர்.
தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் மக்களை வாட்டி வதைக்கிறது. குறிப்பாக சென்னையில் ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் அன்றாடம் போராடி வரும் சூழலை தினந்தோறும் காண முடிகிறது.
சேலம் மாவட்டமும் வறட்சியின் பிடியில் சிக்கி இருப்பதால்,
புறநகரின் பல்வேறு இடங்களில் தண்ணீருக்காக மக்கள் சாலைக்கு வந்து போராடி வருகின்றனர். சேலம் மாநகரில் மட்டும் மேட்டூரில் இருந்து தனி குடிநீர் திட்டத்தின் மூலம் வாரம் ஒருமுறை விநியோகிகப்படும் குடிநீர் மூலம் ஓரளவு பிரச்சனையை தீர்த்து வைக்கப்படுகிறது.
குடிநீர் குழாய்
இந்த நிலையில்தான் மேட்டூரில் இருந்து ஆத்தூருக்கு தனி குடிநீர் திட்டத்தின் கீழ் கொண்டு செல்லும் பைப் லைனில், சேலம் மாநகராட்சி, சத்திரம் பகுதியில் நேற்று நள்ளிரவு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இரவு 11 மணி அளவில் உடைந்த குடிநீர் குழாயிலிருந்து, தண்ணீர் குபுகுபுவென வெளியேறி வருகிறது.
வேதனை
8 மணி நேரத்திற்கு மேல் ஆகியும் இதுவரை உடைப்பை சரி செய்ய மாநகராட்சி ஊழியர்கள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக சாலையிலும் சாக்கடையிலும் கலந்து வருகிறது என சத்திரம் பகுதி மக்கள் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளுக்கு
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மேட்டூரில் இருந்து ஆத்தூருக்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாயில் நேற்று இரவு 11 மணி அளவில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகளோ ஊழியர்களோ
ஒரே ஒருவர் மட்டும் வந்து பார்த்துவிட்டு, சரி செய்வதாக கூறி சென்றனர். ஆனால் 8 மணி நேரத்திற்கு மேலாகியும் இது வரை அதிகாரிகளோ ஊழியர்களோ வரவில்லை.
|
தண்ணீர் சாக்கடை
இதனால் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் சாக்கடையில் கலக்கும் நிலைதான் உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், இங்கு ஏராளமான தண்ணீர் வீணாக சாக்கடையில் கலந்து வருகிறது. ஆனால் இதை சரி செய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவது கண்டிக்கத்தக்கது என குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் 9 மணி நேரம் கழித்து அதிகாரிகள் சரி செய்ததை அடுத்து தண்ணீர் வீணானது சரி செய்யப்பட்டது.