சேலம் அருகே மளமளவென தீப்பிடித்து எரிந்த கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 7 பேர்!
சேலம்: சேலத்தில் ஓடும் காரில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் சென்ற 7 பேரும் உயிர் பிழைத்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். கட்டட தொழிலாளி.
இவர் நண்பர்கள் 6 பேருடன் சேலத்தில் கிறிஸ்தவ தேவாலயம் கட்டுவதற்காக நடுப்பட்டியில் இருந்து தன்னுடைய ஆம்னி காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.
அப்போது சேலம் விமான நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது அவருடைய ஆம்னி காரின் பின்புறம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
உடனே சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் சாலையின் ஓரமாக காரை நிறுத்தி விட்டு உடனடியாக 7 பேரும் காரைவிட்டு வெளியேறினர்.
இதைத் தொடர்ந்து அவர் ஓமலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை முழுவதும் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து தீக்கிரையானது.
இந்த தீ விபத்தில் காரில் வந்த 7 பேரும் காரை விட்டு வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் இச்சம்பவம் குறித்து ஓமலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.