திமுக எம்பி மீது பாய்ந்தது கொலை மிரட்டல் வழக்கு.. சேலத்தில் திடீர் பரபரப்பு!
சேலம் திமுக எம்பி எஸ் ஆர் பார்த்திபன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
சேலம்: திமுக எம்பி ஆனதும், சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் மீது கொலை மிரட்டல் வழக்கு அதிரடியாக போடப்பட்டுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டவர்தான் பார்த்திபன். இது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம். இங்கு அதிமுக சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளரை விட ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 926 வாக்குகள் வித்தியாசத்தில் பார்த்திபன் வெற்றி பெற்றார். எம்பியும் ஆகிவிட்டார்.
இந்நிலையில், திடீரென ஒரு வழக்கு எம்பி மீது போடப்பட்டுள்ளது. சேலம் வேடங்கரடு மலைப்பகுதியில் கள தணிக்கைக்குச் சென்ற வனக்காவலர்களுக்கு பார்த்திபன் கொலை மிரட்டல் விடுத்ததாக வனச்சரக அலுவலர் திருமுருகன் என்பவர் புகார் தந்துள்ளார்.
இந்த புகாரின்பேரில் எம்பி பார்த்திபன் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், அரசு சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவி உடையில் காட்சியளித்த அத்தி வரதர்... தரிசனம் செய்தார் ஹெச். ராஜா
இப்படி வழக்கு பதிவு செய்தது குறித்து பார்த்திபன் தரப்பில் கேட்டதற்கு, தேவையில்லாமல் இப்படி தன் மீது அவப்பெயரை உண்டாக்கவே வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். எனினும், போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அடுத்து அதை ரத்து செய்யக்கோரி பார்த்திபன் சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் இந்த மனுவை டிஸ்மிஸ் செய்யக்கோரி வனத்துறை போலீஸ் சார்பில் கோர்ட்டில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சேலம் எம்பி பார்த்திபன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.