காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாகிறது.. வரலாற்று உத்தரவு.. வெளியிட்டார் முதல்வர்
Recommended Video
சேலம்: டெல்டா மாவட்டங்களை பாதுகாப்பதற்காக, எங்களுடைய அரசு காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட, சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், தலைவாசலில் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் முதல்வர் பேசியதாவது:
பேராசை பிடித்த நபர்களுக்கு எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை பொதுநலனுக்கு பயன்படுத்துவது கிடையாது. இந்த அரசின் செயல்பாடுகளால் மக்கள் மத்தியில், நடுவே நல்ல பெயர் ஏற்பட்டு வருகிறது. எனவே நமக்கு அரசியலில் எதிர்காலம் இல்லை என்ற பயத்தின் காரணமாக தினமும் வாயைத் திறந்தால் பொய் பேசி பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் எதிர்க்கட்சியினர்.
உதாரணத்திற்கு நெடுவாசல் பிரச்சனை. என்ன தான் மத்திய அரசு திட்டம் கொண்டுவந்தாலும் மாநில அரசு தடையில்லா சான்று அளிக்காமல் அங்கு பணிகளை தொடங்க முடியாது. அது அனைவருக்கும் தெரியும், எதிர்க்கட்சி தலைவருக்கு தெரியும். மக்கள் நலனை குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அம்மா அரசு ஒரு போதும் அதற்கு தடையில்லா சான்று வழங்காது என்று சட்டசபையிலும் வெளியிலும் நான் பலமுறை அறிவித்துள்ளேன்.
திருவண்ணாமலை, திருச்சி, சேலத்தில் புதிதாக 3 கால்நடை தீவன ஆலை.. முதல்வர் அதிரடி அறிவிப்பு
திமுக அனுமதி கொடுத்தது
உண்மை என்னவென்றால், தஞ்சை நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது திமுகவில் அங்கம் வகிக்கும் டி ஆர் பாலு தான். 1996 ஆம் ஆண்டு பெட்ரோலியத் துறை இணை அமைச்சராக இருந்த டி ஆர் பாலு ராஜஸ்தானில் மீத்தேன் வாயு நிலத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்தார். இந்த திட்டத்தை டெல்டா மாவட்டங்களில் செயல்படுத்த முயற்சி செய்தார். 2010-ஆம் ஆண்டு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றார். ஆழ்துளை கிணறு அமைத்து ஆய்வு பணி துவங்க நான்காண்டுகளுக்கு ஒரு நிறுவனத்துக்கு 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் அனுமதி வழங்கியது திமுக அரசுதான். தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த இடத்திற்கான அனைத்து உதவிகளையும், தமிழக அரசு செய்யும் என்று அப்போதைய திமுக அரசு தெரிவித்தது. தற்போது நெடுவாசலில் தங்கள் கட்சியினரை வைத்து, போராட்டம் நடத்தி பிரச்சனையை கிளப்புகிறார்கள்.
டி.ஆர்.பாலு ஒப்புதல்
ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வந்தது திமுக. அதை டி ஆர் பாலு தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். அது ஊடகங்களில் வெளிவந்து உள்ளது. திமுகதான் கொண்டு வந்தது என்று ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அதை தடுத்து நிறுத்தியது அதிமுக அரசு. ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை, என்று நாம் வாழ்வில் பஞ்சமே இல்லை. டெல்டா மாவட்ட விவசாயிகள் நீராதாரம் பெறுவதற்கு பொன்னியின் செல்வி ஜெயலலிதா நடத்திய சட்டப் போராட்டத்தின் காரணமாக காவேரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டு தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டது.
நீர் பிரச்சினை
இந்த அரசு காரணமாகத்தான் பரம்பிகுளம், முல்லை பெரியாறு பிரச்சினைகளில் சட்டரீதியான நடவடிக்கைகளை மற்றும் பிற நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுத்து வருகிறது. டெல்டா பகுதிகளில் மழை பொய்த்த காரணத்தால் 2017-18ம் ஆண்டுகளில் வறட்சி ஏற்பட்டது. அப்போது நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி செய்வதற்கு ஏதுவாக சிறப்பு குறுவை தொகுப்பு திட்டத்தை கொடுத்தது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா விளங்குகிறது. வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கை சவால்களை இந்த பகுதி தொடர்ந்து எதிர்கொண்ட போதிலும் விவசாயம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்
டெல்டா பகுதிகள் கடல் நீர் சார்ந்த பகுதியாக இருக்கிறது. எனவே கடல் உப்பு நீர் உள்ளே புகுந்து விடும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, இதனை பாதுகாக்க வேண்டியது அவசியம். கரிகால் பெருவளத்தான் காலத்துக்கு முன்பு இருந்த தமிழரின் உணர்வுடன் கலந்துள்ள காவிரி டெல்டா பகுதியை பாதுகாத்திட ஒரு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை இந்த விவசாய பெருவிழாவில் நான் அறிவிக்க விரும்புகிறேன். தமிழகத்தின் நெற்களஞ்சியம், காவிரி டெல்டா பகுதி. எனவே, தமிழகத்தின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று அறிவிப்பை வெளியிடுகிறேன்.
ஹைட்ரோகார்பன் வராது
டெல்டா மாவட்டங்களை பாதுகாப்பதற்காக, எங்களுடைய அரசு காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட, சிறப்பு வேளாண் மண்டலமாக மாறும் என்ற அறிவிப்பை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். டெல்டா மாவட்ட விவசாயிகளின் உள்ள குமுறல்களை அரசு உணர்வுபூர்வமாக தெரிந்துகொண்டு இந்த அறிவிப்பை ஒரு விவசாயி என்ற அடிப்படையில் நான் வெளியிடுகிறேன். விவசாயிகள் துன்பங்கள் துயரங்கள் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். இதை செயல்படுத்த சட்ட வல்லுனர்களை கலந்தாலோசித்து வழிமுறைகளை ஆராய்ந்து ஒரு தனி சட்டம் இயற்றிட இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில், புதிதாக ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் துவங்குவதற்கு அதிமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. நான் ஒரு விவசாயி. விவசாயி பாதிக்கக் கூடிய எந்த ஒரு திட்டத்தையும் இனிமேல் தமிழகத்தில் கொண்டு வர முடியாது. அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.