மேள, தாளம் முழங்க சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்டது கல்லணை.. அமைச்சர்கள் பங்கேற்பு
சேலம்: சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து கடந்த 13ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று இரவு கல்லணையை வந்தடைந்து. இதையடுத்து, இன்று கல்லணை திறக்கப்பட்டது.
அணையின் அருகே உள்ள விநாயகர், ஆஞ்சநேயர் கோவில்களில் இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு, மேள தாளம் முழங்க, அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு, நடராஜன், வளர்மதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான வைத்திலிங்கம், தஞ்சை, திருவாரூர், திருச்சி, நாகை, அரியலூர் மாவட்ட கலெக்டர்கள் விழாவில் பங்கேற்றனர். அனைவரும் கல்லணையில் மலர் துாவி அணையை திறந்து வைத்தனர்.
கல்லணை தண்ணீர் திறப்பு மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது திறக்கப்படும் தண்ணீர் கடைமடை வரை சென்று சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பா சாகுபடிக்கு, இந்த தண்ணீர் ஆதாரமாகும்.