சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலம்... ஜெயலலிதாவுக்கு பெருமை சேர்த்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சேலம்: சேலம் மாநகரில் நிலவிய கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
தமிழகத்திலேயே மிக நீண்ட தூரத்துக்கு கட்டப்பட்டுள்ள இந்த ஈரடுக்கு பாலத்துக்கு மறைந்த ஜெயலலிதாவின் பெயரை சூட்டி அவருக்கு சிறப்பு சேர்த்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
சேலத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த ஈரடக்கு மேம்பாலத்தின் மொத்த திட்ட மதிப்பு ரூ.441 கோடியாகும்.
கொரோனா இறப்பை அரசு மறைக்கவில்லை... தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் இல்லை -முதலமைச்சர் திட்டவட்டம்
போக்குவரத்து நெரிசல்
சேலம் மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கத் தொடங்கியதால் அதற்கு தீர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஈரடுக்கு மேம்பாலம் கட்ட கடந்த 2016-ம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது. அப்போது நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக மட்டும் இருந்த எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்று ஈரடுக்கு மேம்பால திட்டத்தை அறிவிக்க வைத்தார். அதன்படி 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த ஈரடுக்கு மேம்பால பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் ஜெயலலிதா.
ரூ.441 கோடியாக அதிகரிப்பு
சேலத்தில் திறக்கப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பால திட்டமதிப்பு முதலில் ரூ.320 கோடியாக இருந்தது. பிறகு அந்த மதிப்பு உயர்த்தப்பட்டு ரூ.441 கோடியாக அதிகரிக்கப்பட்டது. சுமார் 7 கி.மீ.தூரம் நீளமுடைய இந்த பாலம் தமிழகத்திலேயே மிக நீண்ட ஈரடுக்கு பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. மொத்தம் 173 வலிமையான தூண்கள் இந்த பாலத்திற்கு கீழ் அமைக்கப்பட்டுள்ளன. சேலத்திற்கு கம்பீரம் சேர்க்கும் வகையில் இந்த பாலம் அமைந்துள்ளதாக அந்த ஊர் மக்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.
ரயில்வே மேம்பாலம்
சேலம் குரங்குச்சாவடி முதல் புதிய பேருந்து நிலையம் வழியாக 4 ரோடு அண்ணா பூங்கா வரை 5 கி.மீ. தூரத்திற்கும், அதேபோல் ஏ.வி.ஆர்.ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வரை 2.6 கி.மீ. தூரத்திற்கும் இந்த ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதேபோல் சேலம் மாநகரின் வணிகப்பகுதியான லீ பஜாரில் தொடங்கி செவ்வாய்பேட்டை வரையிலான ரயில்வே மேம்பாலத்தையும் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். இதன் திட்ட மதிப்பு ரூ.46.35 கோடியாகும்.
பல்வேறு திட்டங்கள்
மேலும், சேலம் மாவட்டத்தில் ரூ.286 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை முந்தைய திமுக ஆட்சியில் வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்தபோது பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அரசிடம் கேட்டுப்பெற்று கொண்டு வந்தார். இதனிடையே இப்போது முதலமைச்சராக இருக்கு எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமும் சேலம் என்பதால் அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு அங்கு பஞ்சமில்லை.