தினகரன், ராமதாஸ், ஒபிஎஸ் குறித்த கேள்விகள்.. மிரள வைத்த எடப்பாடி.. சசிகலா பற்றிய பதில் தான் செம்ம!
சேலம்: சேலம் ஓமலூரில் நேற்று செய்தியாளர் சந்திப்பில், ராமதாஸ், சசிகலா,, டிடிவி தினகரன், ஒபிஎஸ் என அடுத்தடுத்து எழுப்பப்பட்ட சிக்கலான கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பதில் அளித்து மிரள வைத்தார்.
சேலம் ஓமலூரில் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகள் சசிகலா, டிடிவி தினகரனை பற்றியே இருந்தது. அத்துடன் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு குறித்த கேள்வியும் இருந்தது. கூட்டணி பேச்சுவார்த்தை குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து முதல்வர் பேசுகையில், அமைச்சர் வேலுமணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அண்ணன் தம்பி பிரச்சனை பற்றியதை ஊடகங்கள் தான் தவறாக திரித்து செய்தி வெளியிட்டன. இதை வைத்துக் கொண்டு அமமுக குறித்த ஊகங்களுக்கு பதில் சொல்ல முடியாது என்றார்.
எந்த பிரச்சனையும் இல்லை
ஒபிஎஸ் குறித்து கேள்விக்கு, எனக்கும், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் ஒன்றாகவே அனைத்து இடங்களுக்கும் செல்கிறோம். அதிமுகவில் எள்ளளவு கூட யாராலும் பிளவை ஏற்படுத்த முடியாது என்றார்.
சேர்ப்போம்
கட்சியில் நீக்கப்படுபவர்கள் குறித்த கேள்விக்கு, அதிமுகவில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டால் மற்ற கட்சிகளைப்போல் தான் அடிப்படை உறுப்பினர் இருந்து நீக்கப்படுகிறார்கள். தவறுக்கு வருத்தம் தெரிவித்து கட்சயில் சேர விரும்புவோரை மீண்டும் சேர்த்துக் கொள்வோம் என்று முதல்வர் கூறினார்.
ஆட்சியை கவிழ்க்க முயற்சி
டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு, அதிமுக ஆட்சியை கவிழ்க்கவும், கட்சியை உடைக்கவும் 18 எம்எல்ஏக்களை பிரித்து சென்றவர் டிடிவி தினகரன். அவரது முயற்சி எடுபடவில்லை. அதன் காரணமாகவே அவர் அமமுக என்ற கட்சியை தொடங்கினார். யாரேனும் அமமுகவில் இருந்து விலகி, அதிமுகவில் சேர நினைத்தால் கட்சி தலைமை முடிவு செய்யும் என்றார்.
அரசுடைமை ஏன்
சசிகலா, இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்படுவது குறித்த கேள்விக்கு, மாவட்ட ஆட்சி தலைவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்கள். நீதிமன்ற உத்தரவுப்படி சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்படுகிறது. தமிழக அரசுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றார்.
சுமூகமாக பதில்
அதிமுக கூட்டணியில் இழுபறி இருப்பதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, நீங்கள் தான் இழுபறி என்கிறீர்கள். நாங்கள் சொல்லவில்லையே. திமுகவில் எத்தனை சுற்று பேசியிருப்பார்கள். அங்கு கேள்வி எழுப்பி இருக்கிறீர்களா, அதை பற்றி பேசுவதும் இல்லை. எழுதுவதும் இல்லை. அதிமுக கூட்டணியில் எந்த இழுபறியும் கிடையாது. தொகுதி உடன்பாடு குறித்து சுமூகமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றார்
அஞ்சமாட்டேன்
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு, உரிய நேரத்தில், சூழலுக்கு ஏற்றவாறு அதுபற்றி அறிவிக்கப்படும் என்று முதல்வர் பதில் அளித்தார். எனக்கு அச்சுறுத்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் நான் அஞ்சமாட்டேன் என்றும் கூறினார்.
டிடிவி மீது அதிக விமர்சனம்
டிடிவி தினகரனை பற்றியே அதிகம் விமர்சிக்கிறீர்கள், சசிகலாவை விமர்சிப்பது இல்லையே என்ற கேள்விக்கு, கட்சியில் இல்லாதவரைப் பற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.