அமித்ஷா தெளிவுபடுத்தியும்.. ஸ்டாலின் குழப்புகிறார்.. அரசியல் சூழ்ச்சி செய்கிறார்..எடப்பாடியார் நறுக்
என்ஆர்சியால் ஒரு பாதிப்பும் இல்லை என்று எடப்பாடியார் தெரிவித்துள்ளார்
சேலம்: தேவையில்லாமல் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை எதிர்க்கின்றனர். மக்கள் செல்வாக்கு இல்லாத கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு, வேண்டுமென்றே மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடி தந்து வருகின்றன... என்ஆர்சி எடுக்கவில்லை என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவாக சொல்லி உள்ளார்.. ஸ்டாலின் அரசியல் சூழ்ச்சி செய்து அரசியல் நாடகமாடுகிறார்" என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் குடியுரிமைச் சட்டம் மற்றும் என்ஆர்சிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. என்ஆர்சி.,க்கும் என்பிஆர்.,க்கும் தொடர்பில்லை என மத்திய அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்திருந்தார். எனினும் இன்றுவரை என்ஆர்சி பேசுபொருளாக உருவெடுத்து வருகிறது.
திமுக தலைவர் ஸ்டாலினும், "என்பிஆர், என்ஆர்சி நாணயத்தின் இரு பக்கங்கள்.. தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்காக ரூ.4 ஆயிரம் கோடி செலவிட வேண்டியதன் அவசியம் என்ன? மதங்களுக்குகிடையே பாகுபாடு மற்றும் வேற்றுமையை மக்கள் தொகை பதிவேடு உருவாக்கும் என்ற கவலை எழுந்துள்ளது" என்று ட்விட்டரிலும் பதிவிட்டிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, என்ஆர்சி குறித்தும், அதற்கு எதிர்க்கட்சிகள் தெரிவித்து வரும் எதிர்ப்புகள் குறித்தும் கருத்து கூறினார். மேலும் தமிழகத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்தது குறித்தும் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். முதல்வர் பேசியதாவது:
அறிவிப்பு
"நல்லாட்சியில் தமிழகத்திற்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்தது மகிழ்ச்சி தருகிறது.. உண்மையாக அனைத்து மக்களும் மகிழ்ச்சி அடையும் அளவிற்கு இந்த அறிவிப்பு இருக்கிறது.. இது, அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைத்த வெற்றி ஆகும். உழைத்தவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றியதால், இந்தியாவிலேயே தமிழகம் சிறந்த ஆளுமை திறன் மிக்க மாநிலம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இதற்காக அதிகாரிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு ஊழியர்களுக்கு என் நன்றி.
ஸ்டாலின்
எப்போதுமே அதிமுகவை ஏதாவது குறைசொல்வது தான் ஸ்டாலினின் வழக்கம். இதற்கும் குறை சொல்கிறார்.. இந்தியா முழுவதும் ஆய்வு செய்து, ஒவ்வொரு துறைக்கும் தந்து.. அதனடிப்படையில்தான் முதலிடத்தை தமிழகம் பெற்றுள்ளது.. இதில் யார் சிபாரிசும் கிடையாது.
தேசிய மக்கள் தொகை பதிவேடு
தேசிய மக்கள் தொகை பதிவேட்டை, 2003ல் பா.ஜ., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட போது, திமுகவும் மத்தியில் அங்கம் வகித்தது. 2010ல் அமல்படுத்தப்பட்ட போதும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் திமுக அங்கம் வகித்தது. ஆனால் இப்போது, திட்டமிட்டு, வேண்டுமென்றே அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக எதிர்க்கின்றனர். மக்களையும் குழப்புகிறார்கள். மக்களிடம் செல்வாக்கு இல்லாத கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொண்டு மத்திய மாநில அரசுக்கு நெருக்கடி கொடுக்க தர என்பதற்காக தான் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை எதிர்க்கின்றனர்.
அமித்ஷா
என்ஆர்சி எடுக்கவில்லை என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மிக தெளிவாகவே தெரிவித்துள்ளார். இதனை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஸ்டாலின் அரசியல் சூழ்ச்சி செய்து... மக்களை குழப்பி அரசியல் நாடகமாடுவதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தெளிவு
தேசிய மக்கள் தொகை பதிவேட்டால், யாருக்கும் பாதிப்பு இல்லை. 6 மாதங்கள் குடியிருந்தாலே, தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இடம்பிடிக்கலாம். அந்தவகையில், இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் யாரும் விடுபட மாட்டார்கள் என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது" என்றார் முதல்வர்.