எடப்பாடி தொகுதியில் 90,000 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி... முதலமைச்சரின் சொந்த நிதியில் நிவாரணம்
சேலம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் 90,000 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி பைகள் விநியோகம் செய்து வருகிறார்.
தனது சொந்த நிதியில் இருந்து அரிசியை கொள்முதல் செய்து அதை குடும்பத்திற்கு 5 கிலோ என பிரித்துக்கொடுக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இதற்கான பணிகளில் எடப்பாடி தொகுதி அதிமுக நிர்வாகிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
வேண்டாம்.. சென்னைக்கு ரயில், விமான சேவை இப்போதைக்கு வேண்டாம்.. மோடியிடம், எடப்பாடியார் கோரிக்கை
நிவாரணம்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் லட்சக்கணக்கான தினக்கூலி பெறுவோர் வருவாய் இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு தன்னார்வலர்களும், அரசியல் கட்சியினரும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் எடப்பாடி தொகுதி மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த நிதியில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்.
வீடு தவறாமல்
எடப்பாடி தொகுதியை சேர்ந்த 90,000 குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு தலா 5 கிலோ அரிசி பைகள் வழங்கப்பட்டு வருகின்றனர். வீடு தவறாமல் அரிசி பைகளை வழங்குமாறு அதிமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை முதல் நான்கு நாட்களாக எடப்பாடி தொகுதியில் இலவச அரிசி நிவாரணமாக கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை சென்னையில் இருந்தவாறே நிர்வாகிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்து வருகிறார்.
முகக்கவசம்
எடப்பாடி தொகுதிக்குள் வரும் கொங்கணாபுரம், நங்கவள்ளி, பூலாம்பட்டி, ஜலகண்டாபுரம், கெங்கவள்ளி ஆகிய ஒன்றியங்களில் முழு வீச்சாக அந்த பகுதி அதிமுக நிர்வாகிகள் முதலமைச்சர் அளித்து அரிசி சிப்பங்களை டோர் பை டோர் வழங்கி வருகின்றனர். அரிசி விநியோகிக்கும் பணியில் 3 நிர்வாகிகளுக்கு மேல் ஈடுபடக்கூடாது என்றும், சமூக விலகலை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து தான் இந்த நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் அதிமுக நிர்வாகிகளிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
நிதியுதவி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னெடுத்துள்ள இந்த நிவாரண உதவி திட்டத்துக்கு எடப்பாடி தொகுதி மக்களிடையே பரவலாக வரவேற்பு காணப்படுகிறது. இதனிடையே ஒரு சிலர் மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக முதல்வரிடம் கூறி நிதியுதவி பெற்றுத்தருமாறு நிவாரண பொருட்கள் வழங்கச் செல்லும் அதிமுகவினரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.