நிர்வாணப்படுத்தி பூஜை செய்கிறார்.. மிரட்டுகிறார்.. சாமியார் மீது பெண் பரபரப்பு புகார்
சேலத்தில் நிர்வாண பூஜை நடத்துவதாக போலி சாமியார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது
சேலம்: "பெண்களை நிர்வாணப்படுத்தி பூஜை செய்கிறார்.. அதை செல்போனிலும் படம் பிடித்து கொண்டு மிரட்டி வரும் சாமியார் மீது நடவடிக்கை வேண்டும்" என்று சேலம் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
சேலம் சங்கர் நகரை சேர்ந்தவர் புஷ்பா. 52 வயதான இவர், புரட்சி கரசோஷலிஸ்ட் கட்சியின் கிளை செயலாளராக உள்ளார். இன்று, மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவுடன் அவர் வந்திருந்தார். அந்த மனுவின் சுருக்கம் இதுதான்:
"கணவனை இழந்த நான், என் மகனுடன் சேர்ந்து கூலி வேலை பார்க்கிறேன். சங்கர் நகரில் ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கிறேன். அந்த வீட்டு உரிமையாளரின் மகன், வாடகைக்கு குடியிருந்த குடும்ப பெண்களை இருடியம் பூஜைக்கு நிர்வாணப்படுத்தி பூஜை செய்து வந்தார்.
இதனை உறவினர்கள் உதவியுடன் செல்போனில் பதிவு செய்து கொண்டு, மீண்டும் பூஜைக்கு அந்த பெண்களை அழைக்கிறார். அவர்கள் வரவில்லையானால், செல்போன் பதிவுகளை காட்டி மிரட்டுகிறார். பேஸ்புக்கில் போட்டுவிடுவேன் என்றும் அப்பாவி பெண்களை மிரட்டுகிறார். அதனால் நிறைய பெண்கள், தங்கள் கணவனிடம் இதை சொல்லாமல் வீட்டை காலி செய்துவிட்டனர்.
இந்த சம்பவங்கள் மாதிரியே என்னையும் இந்த நிர்வாண பூஜைக்கு ஈடுபட வற்புறுத்தினர். நான் மறுத்ததால் அவர்களுடைய நிலத்திற்கு பட்டா, சிட்டா, வாங்கி தருமாறு கேட்டதால் அதனை வாங்கி கொடுத்தேன். ஆனால் இப்போது, அந்த ஆவணங்கள் பெறுவதற்கு 1 லட்சம் ரூபாய் உன்னிடம் கொடுத்தேன் என்று பொய் சொல்கிறார்.
அசிங்கப்படுத்துவதாக மிரட்டுகிறார். இதுகுறித்து விசாரித்து நியாயம் வழங்க வேண்டும். இந்த சாமியாருக்கு ரவுடிகள் தொடர்பு அதிகம் என்பதால், ஊருக்கு பயந்தே ஊரை விட்டு போகிறேன்" என்று தெரிவித்துள்ளார். இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.