சசிகலா உடல்நிலை பாதிக்கப்பட்டதில் சதி இருக்குமோ...சந்தேகம் கிளம்பும் முத்தரசன்
சேலம் : விடுதலையாக ஒரு வாரம் இருந்த நிலையில் சசிகலாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதில் ஏதோ சதி இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு கடந்த வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவசர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனால் சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து, நேற்று சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டார். நாளை அவர் உறுதியாக விடுதலை ஆவார் என அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் நேற்று தெரிவித்திருந்தார்.
சசிகலா நலமுடன் திரும்பனும்
இந்நிலையில் சேலத்தில் பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், சசிகலா அவர்கள் நலமுடன் திரும்பி வர வேண்டும் நலமுடன் வாழ வேண்டும். சசிகலா குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு நான்காண்டு காலம் சிறை தண்டனை முடிந்து நாளை வெளியே வருகிறார்.
உடல்நிலை பாதிப்பில் சதி இருக்குமோ
உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பின்பு அவர் உடல்நிலை சீராகி உள்ளார். அவர் உடல்நலம் சீரானது வரவேற்கத்தக்கது. விடுதலை ஆக ஒரு வார காலம் உள்ள நிலையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது எனக்கும் தமிழக மக்களுக்கும் இதில் ஏதோ சதி இருக்குமோ என ஐயப்பாடு எழுந்துள்ளது .
கண்துடைப்பு ஆணையம்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்திற்கு மேலும் கால அவகாசம் வழங்கியிருப்பது மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலாகும். சந்தேகம் என்று கூறிய துணை முதல்வர் இதுவரை ஆணையத்தில் நேரில் சென்று ஆஜராகவில்லை. இது ஒரு கண்துடைப்பு ஆணையம்.
முதல்வர் டெல்லி சென்றது ஏன்
முதல்வர் டெல்லிக்கு சென்று தமிழகத்தில் வழங்கவேண்டிய நிதியைப் பெற்று வருவார். நிதி வழங்கும் படி டெல்லி சென்றிருக்கிறார் என்று அரசு செய்திகள் வெளியிட்டது. ஆனால் அங்கு சென்று பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் , தான் மத்திய அரசிடம் எவ்வளவு நிதி கேட்டுள்ளேன். இவ்வளவு நிதி வழங்க உத்தரவாதம் வழங்கினார்கள் என்று எந்த ஒரு செய்தியும் சொல்லவில்லை.
சசிகலா பற்றி பேசிய முதல்வர்
மாறாக சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்று கூறினார். அவர் கூறிய அடுத்த நாள் சசிகலாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தமிழக மக்களிடையே ஒரு சதியாக இருக்குமோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. எனக்கும் அந்த ஐயப்பாடு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.