தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி. பார்த்திபனுக்கு கொரோனா தொற்று உறுதி..!
சேலம்: சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக எம்.பி.பார்த்திபனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவர்கள் அறிவுரைப்படி அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்த நபர்களையும் கொரோனா சோதனை நடத்திக் கொள்ள கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் சேலம் மாவட்டம் முழுவதும் திமுக எம்.பி. பார்த்திபன் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். தினமும் 100 கிலோ மீட்டர்களுக்கும் குறையாமல் பயணித்து பரப்புரை செய்து வந்த அவருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் உடல் அசதி ஏற்பட்டுள்ளது.
பிரச்சாரப் பயணத்தின் காரணமாக ஏற்பட்ட உடல் அயர்வாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில் காய்ச்சலும் வந்ததால் கொரோனா சோதனை செய்திருக்கிறார். அதில் கொரோனா தொற்று உறுதி என முடிவு வந்ததை அடுத்து தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட சேலம் திமுக எம்.பி. பார்த்திபனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்திருக்கிறார். கடந்த ஒரு வாரமாக பார்த்திபன் எம்.பி.யுடன் பயணித்தவர்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள் தங்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள உள்ளனர்.
ஏற்கனவே சேகர்பாபு, கே.என்.நேரு, போன்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சூழலில் பார்த்திபனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.