சேலம் அருகே பெரும் அதிர்ச்சி.. சாலையோரத்தில் சிதறி கிடந்த கொரோனா சளி மாதிரிகள்.. மக்கள் பீதி
சேலம்: சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மாதிரிகள் சாலையோரம் சிதறிக் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மெயின் ரோட்டுக்கு அருகே சளி மாதிரிகள் சிதறிக்கிடந்தன. அங்குள்ள பொதுமக்கள் அருகே சென்று பார்த்தபோது கொரோனா நோயாளிகளின் சளி மாதிரிகள் அவை என்று தெரியவந்துள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. பிறகு இது ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.
சாலையோரம் கொரோனா சாம்பிள்
இவ்வாறு ஆய்வகத்துக்கு எடுத்துச் செல்லும் போது இருசக்கர வாகனத்திலிருந்து மருத்துவ ஊழியர்கள் அதைக் கீழே தவறுதலாக போட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிகமான மாதிரிகள் இருக்கும் போது ஆம்புலன்ஸ் மூலமாக சளி மாதிரிகள் பரிசோதனை மையங்களுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஆனால் இங்கே சிதறிக்கிடக்கும் அளவை கவனித்தால் இவை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றபோது மருத்துவப்பணியாளர்களின் அலட்சியம் காரணமாக கீழே விழுந்து இருப்பது போல தெரிகிறது.
வாகனங்கள் ஏறி இறங்கின
ஒரு சில மாதிரிகள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் ஏறி இறங்கியதால் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் அவை சிதறிக்கிடக்கின்றன. எனவே அப்பகுதியிலுள்ள மக்களுக்கு நோய் பரவல் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அகற்றும் பணி
இதனிடையே தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து சிதறிக்கிடந்த சளி மாதிரிகளை அகற்றியுள்ளனர். யார் அந்த அலட்சிய ஊழியர் என்று விசாரணை துவங்கியுள்ளது.
பெரிய தவறு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒட்டுமொத்த நாடும் முடங்கிப் போய்க் கிடக்கிறது. அப்படியான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு நோய் கொரோனா. பாடகர், எஸ்பி பாலசுப்பிரமணியம், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, எம்பி வசந்தகுமார், உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இப்படி ஆபத்தை விளைவிக்கக் கூடிய சளி மாதிரி சாலையில் சிதறிக் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.