காதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை
ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் காதல் ஜோடிஒன்று தஞ்சமடைந்தனர்.
ஆத்தூர்: காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தால் காதல் ஜோடி ஒன்று போலீசில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து பெண்ணின் தந்தை போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே விஷம் சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்குமார். 26 வயதாகும் இவர், பிசிஏ படித்துள்ளார். மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் காலேஜில் சேர்த்துவிடும் வேலையை பார்த்து வருகிறார்.
இவரும், கல்லூரி ஒன்றில் எம்சிஏ 2-ம் ஆண்டு படிக்கும் சூர்யா என்ற மாணவியும் உயிருக்குயிராக விரும்பினர். சூர்யாவுக்கு 22 வயதாகிறது. லவ் மேட்டர் வீட்டுக்கு தெரிந்தது. வேறு வேறு பிரிவினர் என்பதால் இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது.
கொடுமுடி
எப்படியோ வீட்டில் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் என்று முடிவெடுத்த இருவரும், கடந்த, 13ம் தேதியன்று, கொடுமுடியில் உள்ள ஒரு கோயிலில் கல்யாணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் பாதுகாப்பு கேட்டு நேற்று இரவு ஆத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்கள். இதனால் போலீஸ் தரப்பும், இரு வீட்டு பெற்றோர், பெரியோர்களை வரவழைத்து பேச்சு நடத்தினார்கள். இதில் சூர்யா வீட்டில் சமாதானத்துக்கு ஒத்துக் கொள்ளவே இல்லை.
ரங்கசாமி
அதிலும் சூர்யாவின் தந்தை ரங்கசாமி, "என் பெண்ணை எங்களுடன் அனுப்பலேன்னா, நானும், என் பொண்டாட்டியும் இங்கேயே விஷம் குடிச்சு தற்கொலை செய்துப்போம்" என்றார். ஆனால் சூர்யா கடைசிவரை கார்த்திக்குமாரை விடவே மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டார்.
மயங்கி விழுந்தார்
இதனால் அதிர்ச்சியும், கவலையும் அடைந்த ரங்கசாமியும், அவரது மனைவியும், போலீஸ் ஸ்டேஷன் வாசலிலேயே பூச்சி மருந்து குடித்தனர். இதில் ரங்கசாமி மயங்கி விழுந்து விட்டார். உடனடியாக போலீசார் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து சூர்யாவின் உறவினர்கள், 100க்கும் மேற்பட்டோர், ஸ்டேஷன் வெளியே நின்று, போலீசாருடன் வாக்குவாதம் செய்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகைகள்
செய்தனர். அப்போதும் சூர்யா, தன் முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் அவர் அணிந்திருந்த நகைகளை பெற்றுக் கொண்ட உறவினர்கள், "இனி எங்கள் முகத்திலேயே முழிக்க வேணாம்" என்று சொல்லிவிட்டு சென்று விட்டனர். இதையடுத்து, இரவு, 11:00 மணிக்கு, போலீசார் சூர்யாவை காதல் கணவர் கார்த்திக் குமாருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தினால் ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனே பரபரத்து கிடந்தது.