வளைகாப்பு நிகழ்ச்சி.. வந்த மொய் பணத்தை கஜா புயலுக்கு வாரி வழங்கிய தம்பதி.. சேலத்தில் நெகிழ்ச்சி
Recommended Video
சேலம்: சேலத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியில் வந்த மொய் பணத்தை கஜா புயலுக்கு நிவாரணமாக அளித்த தம்பதியினால் சேலத்தில் நெகிழ்ச்சி தருணம் ஏற்பட்டது.
சேலம் பொன்னம்மாபேட்டையை அடுத்த வாய்க்கால்பட்டறையை சேர்ந்தவர் விஜயன். இவருடைய மனைவி பிரபாவதி. இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.
நிகழ்ச்சி
இந்நிலையில் தற்போது பிரபாவதி தற்போது 7 மாத கர்ப்பமாக இருக்கிறார். இதையடுத்து அவருக்கு நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நிவாரண நிதி
இதில் கிடைக்கும் மொய் பணத்தை அப்படியே கஜா புயல் நிவாரணத்துக்கு அளிப்பது என தம்பதி முடிவு செய்தனர். அதன்படி மண்டபத்தில் ஒரு பெட்டியை வைத்திருந்தனர். அதில் பிரபாவதி- விஜயன் வளைகாப்பு விழா என எழுதி கஜா புயல் நிவாரண நிதி என எழுதப்பட்டிருந்தது.
புயல் நிவாரணம்
நிகழ்ச்சியில் வசூலான மொய் பணத்தை அந்த பெட்டியில் தம்பதியினர் போட்டனர். இதை பார்த்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். இது போல் கஜா புயல் நிவாரணத்துக்கு ஏராளமானோர் நிவாரணம் அளித்து வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்திடம்
பள்ளிக் குழந்தைகள் தாங்கள் சேமித்து வைத்த பணத்தை அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் அளித்து வருகின்றனர். இது போல் கஜா புயல் நிவாரணத்தை மக்கள் வாரி வழங்கி வருவது அப்பகுதி மக்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கிறது.